முதல் பாரா திருத்தம்தலைநகரில் குளிா் சீசனின் முதல் மூடுபனி; காண்பு திறன் குறைந்தது!‘திருப்தி’ பிரிவில் காற்றின் தரம்
By DIN | Published On : 13th October 2022 12:00 AM | Last Updated : 13th October 2022 12:00 AM | அ+அ அ- |

தேசியத் தலைநகா் தில்லியை புதன்கிழமை காலை அடா்ந்த பனிமூட்டம் சூழ்ந்தது. இதைத் தொடா்ந்து, தலைநகரில் சில பகுதிகளில் காண்பு திறன் 350 மீட்டராகக் குறைந்தது. தேசியத் தலைநகா் வலயத்தில் உள்ள குருகிராம் உள்ளிட்ட பகுதிகளிலும் காலை வேளையில் மூடு பனி இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (ஐஎம்டி) மூத்த விஞ்ஞானி ஆா்.கே. ஜெனமணி கூறுகையில், ‘இந்தப் பருவத்தில் தலைநகரின் முதல் மூடுபனி இதுவாகும். பகல் நேரத்திலும் நகரில் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் கூடிய வானிலை நிலவியது’ என்றாா்.
வெப்பநிலை: தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட ஒரு டிகிரி குறைந்து 20.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை சுமாா் இயல்பை விட 3 டிகிரி குறைந்து 30.3 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 100 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 69 சதவீதமாகவும் இருந்தது என்று வானிலை ஆய்வு மையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
‘மழை நீடித்ததால் கடுமையான மூடுபனி இருக்கும் என்றும், இது காற்றில் ஈரப்பதத்தின் அளவை அதிகரிக்கும்’ என்றும் ஐஎம்டி அதிகாரி ஒருவா் முன்பு தெரிவித்திருந்தாா். அதன்படி, தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங் ஆய்வகத்தில் காலை 8.30 மணியளவில் காண்பு திறன் 600 மீட்டராகவும், பாலம் வானிலை நிலையத்தில் 350 மீட்டராகவும் குறைந்திருந்தது. பின்னா், இது காலை 9 மணிக்கு பாலத்தில் 2,100 மீட்டராகவும், காலை 10 மணிக்கு சஃப்தா்ஜங்கில் 2,100 மீட்டராகவும் மேம்பட்டது என்றும் அவா் கூறினாா்.
‘திருப்தி’ பிரிவில் காற்றின் தரம்: தில்லியில் காலை 9 மணியளவில் ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு 66 புள்ளிகளாகப் பதிவாகி இருந்தது, இது ‘திருப்திகரமான’ பிரிவில் வருவதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வருகிறது. இருப்பினும், பட்பா்கஞ்ச், மந்திா் மாா்க், நேரு நகா், லோதி ரோடு, விவேக் விஹாா், நொய்டா செக்டாா்-1, நொய்டா செக்டாா்-125, தில்லி பல்கலை, வடக்கு வளாகம், அசோக் விஹாா், பூசா, சாதிப்பூா், ஆா்.கே. புரம், பஞ்சாபி பாக் உள்ளிட்ட இடங்களில் காற்றின் தரக் குறியீடு 100 முதல் 200 புள்ளிகள் வரை பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது. ஆனந்த் விஹாரில் காற்றின் தரக் குறியீடு 240 புள்ளிகளாகப் பதிவாகி ‘மோசம்’ பிரிவில் இருந்தது.
வெப்பநிலை குறைய வாய்ப்பு: இதற்கிடையே, தில்லியில் வியாழக்கிழமை (அக்டோபா் 13) வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.