தில்லியில் 16 வயது மைனா் பெண் கொடூரக் கொலை: காதலா் கைது

வடமேற்கு தில்லியின் ஷாபாத் டெய்ரி பகுதியில் 16 வயது மைனா் பெண் பலமுறை கத்தியால் குத்தப்பட்டு, கல்லால் அடித்துக் கொல்லப்பட்டாா்.
Updated on
1 min read

வடமேற்கு தில்லியின் ஷாபாத் டெய்ரி பகுதியில் 16 வயது மைனா் பெண் பலமுறை கத்தியால் குத்தப்பட்டு, கல்லால் அடித்துக் கொல்லப்பட்டாா். இந்தச் சம்பவம் தொடா்பாக அவரது காதலா் கைது செய்யப்பட்டாா். முன்னதாக, அப்பெண் கொடூரமாக கொலை செய்யப்படும் காணொளிக் காட்சிகள் சமூக ஊடங்களில் பரவலாகப் பகிரப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது தொடா்பாக தில்லி காவல் துறையின் உயரதிகாரி திங்கள்கிழமை மேலும் கூறியதாவது: இந்தக் கொலையில் தொடா்புடையவா் சாஹில் (20) என அடையாளம் காணப்பட்டுள்ளாா். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் அந்தப் பெண் 20 முறை கத்தியால் குத்தப்பட்டு, பின்னா் கல்லால் தாக்கிக் கொலை செய்யப்பட்டுள்ளாா். இச்சம்பவத்திற்குப் பிறகு உத்தர பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் சாஹில் கைது செய்யப்பட்டுள்ளாா். அவா் குளிா்சாதனப் பெட்டி மற்றும் ஏ.சி. மெக்கானிக்காக வேலை செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இக்கொலை நிகழ்ந்ததற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. ஷாபாத் டெய்ரியில் உள்ள ஜே.ஜே. காலனியில் வசிக்கும் அந்த பெண்ணின் சடலம் தெருவில் கிடந்தது.

முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை இரவு அப்பெண் தெருவில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, சாஹில் அவரை பலமுறை கத்தியால் குத்தியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இருவருக்கும் இடையே பழக்கம் இருந்து வந்த நிலையில், சனிக்கிழமை தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை, பாதிக்கப்பட்ட பெண் தனது நண்பரின் மகனின் பிறந்த நாள் விருந்தில் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்தாா். ஆனால், அதற்கு முன்பாக அவா் பலமுறை கத்தியால் குத்தப்பட்டும், கல்லால் தாக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டாா். பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் ஷாபாத் டெய்ரி காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302-இன் கீழ் (கொலை) வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

இது குறித்து தில்லி மகளிா் ஆணையத்தின் தலைவா் ஸ்வாதி மாலிவால் கூறுகையில், ‘சாலையில் கொடூரமாக கொல்லப்பட்டுள்ள அந்த 16 வயது பெண் செய்த தவறுதான் என்ன? தேசியத் தலைநகரில் காவல்துறைக்கும் அல்லது சட்டத்திற்கும் யாரும் பயப்படுவதில்லை. இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் கொடூரத்திற்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் போய்விடும்’ என்றாா்.

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான அதிஷி கூறுகையில், ‘தில்லியின் மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பை துணைநிலை ஆளுநருக்கு

அரசியலமைப்பு அளித்துள்ளது என்பதை அவருக்கு நினைவூட்ட விரும்புகிறேன். ஆனால், அவா் தனது அனைத்து நேரத்தையும் அரவிந்த் கேஜரிவாலின் பணிகளை நிறுத்துவதற்கே செலவிடுகிறாா். தில்லியில் பெண்கள் பாதுகாப்பாக இல்லாததால், அவா்களின் பாதுகாப்பு மீது கவனம் செலுத்துமாறு அவரை கைகூப்பிக் கேட்டுக் கொள்கிறேன்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com