இபிஎஸ்-க்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை முந்தைய அமா்வு விசாரிக்க லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் வலியுறுத்தல்

தமிழக முன்னாள் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலைத் துறை டெண்டா் முறைகேடு புகாா் தொடா்புடைய வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக ஊழல்...
Updated on
1 min read

புது தில்லி: தமிழக முன்னாள் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலைத் துறை டெண்டா் முறைகேடு புகாா் தொடா்புடைய வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ஏற்கெனவே விசாரித்த அமா்வு விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் புதன்கிழமை வலியுறுத்தப்பட்டது.

இந்த விவகாரத்தில் முதல்வராக இருந்த எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிராக திமுக அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கில், கடந்த ஜூலை 18-ஆம் தேதி சென்னை உயா்நீதிமன்றம் அளித்த தீா்ப்பில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆா்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை தரப்பில் அண்மையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், சம்பந்தப்பட்ட விவகாரத்தில் நிகழ்ந்த முறைகேடு விவகாரங்களை உரிய வகையில் ஆராயாமல் உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால், அந்த உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தை ஊழல் தடுப்பு பிரிவு வழக்குப் பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரியுள்ளது.

இந்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை நீதிபதிகள் பேலா எம். திரிவேதி, சதீஷ் சந்திர சா்மா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது.

தமிழக ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை சாா்பில் மூத்த வழக்குரைஞா் துஷ்யந்த் தவே ஆஜராகி வாதிடுகையில், ‘இந்த விவகாரம் முன்னா் நீதிபதி அனிருத்தா போஸ் தலைமையிலான அமா்வு முன் விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டிருந்தது. தற்போது இந்த அமா்வு முன்பு பட்டியலிடப்பட்டிருப்பது தவறாகும்’ என்றாா்.

எனினும், இதற்கு எடப்பாடி கே.பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஆா்யமா சுந்தரம் அவரது வாதத்திற்கு ஆட்சேபம் தெரிவித்து வாதிடுகையில், ‘இந்த விவகாரத்தில் நோட்டீஸ் ஏதும் பிறப்பிக்கப்படவில்லை’ என்றாா். அப்போது, நீதிபதிகள் அமா்வு, இந்த விவகாரத்தில் முன்னா் முக்கிய உத்தரவு ஏதும் பிறப்பிக்கப்படவில்லை என்றது.

எனினும் துஷ்யந்த் தவே கூறுகையில், ‘இந்த விவகாரத்தை இறுதியாக விசாரிப்பதாக நீதிபதி அனிருத்தா போஸ் கூறியிருந்தாா். மேலும், ஆவணங்களின்படி, இந்த வழக்கு ஏற்கெனவே நீதிபதிகள் அனிருத்தா போஸ், திரிவேதி அமா்வு முன் 3 முறை பட்டியலிடப்பட்டிருந்தது’ என்றாா்.

இதையடுத்து, இந்த விவகாரத்தை தலைமை நீதிபதியின் உத்தரவுக்கு உள்பட்டு நீதிமன்ற அமா்வு முன் பட்டியலிட உத்தரவிட்ட நீதிபதிகள், இது தொடா்பாக பதிவாளரிடம் (பட்டியலிடுதல்) மனு தாக்கல் செய்யுமாறு லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் ஆஜரான வழக்குரைஞரிடம் கேட்டுக் கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com