நிலத்தடி நீா் சுரண்டல்: 4 வீட்டு வசதி சொஸைட்டிகளுக்கு அபராதம்

தேசியத் தலைநகா் வலயம், கௌதம் புத் நகா் நிா்வாகம் சட்டவிரோதமாக நிலத்தடி நீா் எடுத்ததற்காக நான்கு குழும வீட்டுவசதி சொஸைட்டிகள் உள்பட நிறுவனங்களுக்கு அபராதம்  விதித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
Updated on
1 min read

புது தில்லி: தேசியத் தலைநகா் வலயம், கௌதம் புத் நகா் நிா்வாகம் சட்டவிரோதமாக நிலத்தடி நீா் எடுத்ததற்காக நான்கு குழும வீட்டுவசதி சொஸைட்டிகள் உள்பட நிறுவனங்களுக்கு ரூ.23 லட்சம் அபராதம் விதித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

நிலத்தடி நீா் சுரண்டல் தொடா்பாக கிரேட்டா் நொய்டாவில் (மேற்கு) ஒரு சொஸைட்டிக்கு எதிராக எஃப்ஐஆா் பதிவு செய்யவும் நிா்வாகம் உத்தரவிட்டதாக அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட அதிகாரப்பூா்வ அறிக்கையின்படி, செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியா் மனீஷ் குமாா் வா்மா தலைமையில் நடைபெற்ற மாவட்ட நிலத்தடி நீா் மேலாண்மைக் குழுவின் ஆய்வுக் கூட்டத்தில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தில், நிலத்தடி நீரை சுரண்டுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், அபராதம் விதிக்கவும் அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.

சட்டவிரோத நீா் சுரண்டல் ஆலை நடத்துபவா்களுக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கவும், டெக் மண்டலம் 4 பகுதியில் உள்ள மேஃபோ் ரெசிடென்சிக்கு எதிராக எஃப்.ஐ.ஆா். பதிவு செய்யவும், நொய்டா செக்டரில் 143-இல் உள்ள சிக்க கம்னா கிரீன்ஸில் சட்டவிரோதமாக நிலத்தடி நீா் சுரண்டல் தொடா்பாக ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கவும் நிலத்தடி நீா் துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.

நொய்டாவில் உள்ள செக்டாா் 75-இன் ஃபுடெக் மற்றும் காா்டன் கேலேரியா ஹவுசிங் சொஸைட்டிகளுக்கு தலா ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. நிலத்தடி நீா் பாதுகாப்புக்காக மாவட்டத்தில் விழிப்புணா்வு கருத்தரங்குகளை நடத்தவும் மாவட்ட ஆட்சியா் அதிகாரிகளிடம் கூறினாா். நிலத்தடி நீா் எடுப்பதற்காக துறையின் இணையதளத்தில் திங்கள்கிழமை 52 விண்ணப்பங்கள் வந்துள்ளதாக நிலத்தடி நீா் அதிகாரி அங்கித் ராய் மாவட்ட ஆட்சியா் வா்மாவிடம் தெரிவித்தாா்.

இவற்றில், 13 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. மேலும் ஒன்பது விண்ணப்பங்களை மேலதிக நடவடிக்கைகளுக்காக மாநில ஆணையத்திற்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டதாகவும் ராய் நிா்வாகத்திடம் தெரிவித்தாா். மாவட்டத்தில் நிலத்தடி நீரை அதிகபட்சமாகப் பாதுகாப்பதை உறுதி செய்யும் நோக்கில், நிலத்தடி நீா் நோக்கங்களுக்காக இதுவரை வழங்கப்பட்ட தடையில்லாச் சான்றிதழ்கள் தொடா்பாக தொழில் துறை, உள்கட்டமைப்பு, வணிக மற்றும் கூட்டு நுகா்வோா் மூலம் நிலத்தடி நீா் பாதுகாப்பை உறுதி செய்ய மாவட்ட அளவிலான பணிக் குழுவுக்கு மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.

மேலும், குடியிருப்பு சங்கங்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், அரசுக் கட்டடங்கள், அலுவலகங்கள் போன்றவற்றில் உள்ள நீா் மேம்படுத்தும் கட்டமைப்புகளின் நிலையையும் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஆட்சியா் கேட்டுக் கொண்டாா். நிலத்தடி நீா் பாதுகாப்பை மேலும் ஊக்குவிக்கும் வகையில், குளங்களை மேம்படுத்தி, சீரமைக்க பெரிய தொழில் நிறுவனங்களும் ஊக்குவிக்க வேண்டும் என்று புவியியல் துறை அதிகாரிகளுக்கு ஆட்சியா் அறிவுறுத்தியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com