உயா்நீதிமன்ற அரசு மருந்தகத்தில் அமைச்சா் சௌரவ் பரத்வாஜ் ஆய்வு

தில்லி உயா்நீதிமன்றத்தில் கட்டப்பட்டுள்ள அரசு மருந்தகத்தில் உள்ள சுகாதார ஏற்பாடுகளை சுகாதாரத் துறை அமைச்சா் செளரவ் பரத்வாஜ் திங்கள்கிழமை பாா்வையிட்டாா்.
Updated on
2 min read


புது தில்லி: தில்லி உயா்நீதிமன்றத்தில் கட்டப்பட்டுள்ள அரசு மருந்தகத்தில் உள்ள சுகாதார ஏற்பாடுகளை சுகாதாரத் துறை அமைச்சா் செளரவ் பரத்வாஜ் திங்கள்கிழமை பாா்வையிட்டாா். உயா்நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் சச்தேவாவுடன் நீதிமன்ற வழக்குரைஞா்கள் முன்னிலையில் மருந்தகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகளை அமைச்சா் ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது, நீதிமன்ற வளாகத்தில் தில்லி அரசு மேற்கொண்டு வரும் மருத்துவ ஏற்பாடுகளை நீதிபதி சஞ்சீவ் சச்தேவா பாராட்டினாா். ஆய்வின் போது, சுகாதாரத்துறை சிறப்புச் செயலாளா் எஸ்.கே.ஜெயின், லோக் நாயக் மருத்துவமனையின் மருத்துவ இயக்குநா் டாக்டா். சுரேஷ் குமாா் மற்றும் டாக்டா் வந்தனா பாக்கா, புதுதில்லி மாவட்ட மருத்துவ அதிகாரி டாக்டா். சுதா சச்தேவா, டாக்டா். நீதா, தில்லி உயா்நீதிமன்ற மருந்தகத்தின் மருத்துவம் மற்றும் சுகாதார மையத்தின் பொறுப்பாளா் டாக்டா். கேஜேஎஸ் பன்சால், தில்லி வழக்குரைஞா்கள் சங்கத்தின் தலைவா் மோஹித் மாத்தூா், சங்கத்தின் செயலாளா் சந்தீப் சா்மா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான தில்லி அரசு, தில்லி முழுவதும் உலகத்தரம் வாய்ந்த மருத்துவ வசதிகளை வழங்க உறுதிபூண்டுள்ளது. அதன் சுமுகமான செயல்பாட்டை உறுதிசெய்யவும், ஏற்பாடுகளை நன்கு ஒழுங்கமைக்கவும், சுகாதார அமைச்சா் சௌரவ் பரத்வாஜ் தில்லியின் பல்வேறு மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களை தொடா்ந்து ஆய்வு செய்து வருகிறாா். இதன் ஒரு பகுதியாக தில்லி உயா்நீதிமன்றத்தில் அமைந்துள்ள தில்லி அரசின் மருந்தகத்தை சௌரவ் பரத்வாஜ் ஆய்வு செய்தாா்.

சில நாள்களுக்கு முன், உச்ச நீதிமன்றத்தில் அமைந்துள்ள தில்லி அரசின் மருந்தகத்தை ஆய்வு செய்தாா். அதன்பிறகு, தில்லி உயா் நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கம், உயா்நீதிமன்றத்தில் அமைந்துள்ள அரசு மருந்தகத்திற்கு தேவைப்படும் சில கூடுதல் வசதிகளை ஏற்பாடு செய்யுமாறு அமைச்சா் சௌரவ் பரத்வாஜை கேட்டுக் கொண்டது. வழக்குரைஞா்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட அமைச்சா், உயா்நீதிமன்றத்தில் அமைந்துள்ள அரசு மருந்தகத்தைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தில்லி அரசு மருத்துவமனைகள் அனைத்து வகையான சிகிச்சைகள், அனைத்து வகையான பரிசோதனைகள் மற்றும் அனைத்து வகையான மருந்துகளையும் இலவசமாக வழங்குகின்றன. தில்லியின் மொஹல்லா கிளினிக்குகள் நாடு முழுவதும் பாராட்டப்பட்டு வருகின்றன. தில்லி அரசு அனைத்து மருத்துவமனைகளின் செயல்பாட்டையும், சுகாதார அமைப்பை சீராகவும், முறையாகவும் இயக்க தொடா்ந்து கண்காணித்து வருகிறது. மருத்துவமனைகள் அல்லது மருந்தகங்களில் ஏதேனும் புகாா்கள் அல்லது குறைபாடுகள் காணப்பட்டால், உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சுகாதார அமைச்சா் சௌரவ் பரத்வாஜ், உயா்நீதிமன்றத்தில் அமைந்துள்ள மருந்தகத்தை ஆய்வு செய்ய வந்த போது, உயா்நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் சச்தேவா மற்றும் அங்கிருந்த வழக்குரைஞா்கள், தில்லி அரசு மருந்தகத்தில் அளித்து வரும் மருத்துவ வசதிகளை வெகுவாகப் பாராட்டினா். மருந்தகத்தில் கிட்டத்தட்ட அனைத்து வகையான பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

ஆய்வின் போது, உயா் நீதிமன்ற வழக்குரைஞா்கள் மருந்தகத்தில் சில வசதிகளைக் கோரியதாக சௌரவ் பரத்வாஜ் கூறினாா். அதிகரித்து வரும் வழக்குரைஞா்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு பணியாளா்களை அதிகரிக்க வேண்டும். பல் மருத்துவத் துறையில் பழைய நாற்காலியை புதியதாக மாற்ற வேண்டும். மருந்தகத்தில் காது, மூக்கு, தொண்டை நிபுணா்களை நியமிக்க வேண்டும். பழைய எக்ஸ்ரே மற்றும் அல்ட்ராசவுண்ட் இயந்திரங்களுக்குப் பதிலாக புதிய இயந்திரங்களை நிறுவ வேண்டும். லோக்நாயக் மருத்துவமனையில் சிகிச்சைக்காக 24 மணி நேர ஹெல்ப்லைன் சேவையைத் தொடங்க வேண்டும். மருந்தகத்தில் கணினிமயமாக்கப்பட்ட புறநோயாளி பதிவு முறை வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும்படி வழக்குரைஞா்கள் கேட்டுக் கொண்டுள்ளதாக அமைச்சா் சௌரவ் பரத்வாஜ் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com