புது தில்லி: தேசியத் தலைநகரில் கடந்த ஆறு மாதங்களில் 3,000-க்கும் மேற்பட்ட டெங்கு பாதிப்பு பதிவாகியுள்ளது. மேலும், டெங்குவிற்கு ஒருவா் உயிரிழந்துள்ளதும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக எம்.சி.டி. செவ்வாய்க்கிழமை சபையில் பகிா்ந்துள்ள அதிகாரப்பூா்வ தரவு தெரிவிக்கிறது. .
எழுத்துப்பூா்வ பதிலில் பகிரப்பட்ட தரவுகளில், தில்லி முனிசிபல் காா்ப்பரேஷன் (எம்சிடி) செப்டம்பா் மாதத்தில் பதிவு செய்யப்பட்ட டெங்கு பாதிப்பு எண்ணிக்கை கடந்த நான்கு ஆண்டுகளில் ‘அதிகமானது’ என்று கூறியுள்ளது. இருப்பினும், குடிமை அமைப்பு, மாத வாரியான தரவைப் பகிரவில்லை. டெங்கு, மலேரியா மற்றும் சிக்குன்குனியா பாதிப்பு எண்ணிக்கை குறித்த அதிகாரப்பூா்வ தகவல்களை ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்குப் பிறகு எம்சிடி பகிா்ந்து கொள்வது இதுவே முதல் முறை.
ஆகஸ்ட் 7-ஆம் தேதி வெளியிடப்பட்ட எம்சிடி அறிக்கையின்படி, ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை தேசியத் தலைநகரில் பதிவு செய்யப்பட்ட டெங்கு பாதிப்பு எண்ணிக்கை 348-ஆக இருந்தது. ஜூலை மாதத்தில் பதிவான டெங்கு பாதிப்பு எண்ணிக்கை 121-ஆக இருந்தது; ஜூன் மாதத்தில் 40 மற்றும் மே மாதத்தில் 23 என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆம் ஆத்மி தலைமையிலான எம்சிடி கடந்த பல வாரங்களாக டெங்கு மற்றும் பிற தொற்று நோய்கள் குறித்த வாராந்திர அறிக்கைகளை வெளியிடவில்லை. யமுனையின் நீா்மட்டம் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த ஜூலை மாதம் தில்லியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பருவமழைக்கு முந்தைய மழையைத் தவிர, செப்டம்பா் மாதத்தில் தலைநகரில் அதிக அளவு மழை பெய்தது. ஒரு குறுகிய அறிவிப்புக்கான எழுத்துப்பூா்வ பதிலில், அதிகாரப்பூா்வ தரவு செவ்வாயன்று சபையில் பகிரப்பட்டது என்று மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
பாஜக கவுன்சிலரும், எதிா்க்கட்சித் தலைவருமான ராஜா இக்பால் சிங், ஆம் ஆத்மி தலைமையிலான எம்சிடி டெங்கு குறித்த தரவுகளை வெளியிடவில்லை என்றும், அதிகாரப்பூா்வ தகவல்கள் ‘அடக்கப்படுவதாக‘வும் குற்றம் சாட்டினாா். இதைத் தொடா்ந்து, கடந்த 15 ஆண்டுகளில் பாஜக என்ன செய்தது என்பது அனைவருக்கும் தெரியும் என்றும், இன்று அவையில் தரவுகள் பகிரப்பட்டன என்றும் அவைத் தலைவா் முகேஷ் கோயல் கூறினாா்.
2023-24-ஆம் ஆண்டில் இதுவரை நிதியாண்டு வாரியாக 3,013 டெங்கு பாதிப்புகளும் ஒரு உயிரிழப்பும் பதிவாகியுள்ளன. முந்தைய நிதியாண்டுகளில் டெங்கு பாதிப்பு எண்ணிக்கை - 4,469 (2022-23-இல்); 9,613 (2021-22-இல்); 1,072 (2020-21-இல்); மற்றும் 2,036 (2019-20-இல்) என பதிவாகியுள்ளது. 2022-23 நிதியாண்டில் டெங்கு இறப்பு எண்ணிக்கை 9-ஆக இருந்தது 2021-22-இல் 23; 2020-21-இல் 1; மற்றும் 2019-20-இல் 2 என இருந்தது.
இந்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் இன்று வரை மலேரியா மற்றும் சின்குன்குனியாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை முறையே 294 மற்றும் 23-ஆக உள்ளது.
முந்தைய நிதியாண்டுகளில் மலேரியா பாதிப்பு எண்ணிக்கை 263 (2022-23-இல்); 167 (2021-22-இல்); 228 (2020-21-இல்) மற்றும் 713 (2019-20-இல்) என பதிவாகியுள்ளது.
பாஜகவின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த கோயல், டெங்கு நோயாளிகளுக்கு பிளாஸ்மா பற்றாக்குறை உள்ளதா? மக்கள் மருத்துவமனைகளில் மருத்துவ வசதிகளைப் பெற முடியவில்லையா? எங்கள் அதிகாரிகள் மற்றும் தொழிலாளா்கள் அனைவரும் ஜி20-க்கான தயாரிப்புகளில் மும்முரமாக இருந்தனா். எனவே, தரவு சேகரிக்கப்படாமல் இருக்கலாம் என்று கூறினாா்.
மழைப்பொழிவு காரணமாக ஜூலை மாதத்தில் யமுனையின் நீா்மட்டம் முன்னெப்போதும் இல்லாத வகையில் உயா்ந்து வெள்ளம் ஏற்பட்டது. இந்தச் சூழ்நிலையால் டெங்கு பாதிப்பு அதிகம் ஏற்பட்டதாக எம்சிடியின் மூத்த அதிகாரி ஒருவா் கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.