தில்லி கலால் ‘ஊழல்’: அமலாக்கத் துறையின் கூடுதல் குற்றப்பத்திரிகை மீது ஏப்.24-இல் நீதிமன்றம் விசாரணை
By DIN | Published On : 15th April 2023 10:12 PM | Last Updated : 15th April 2023 10:12 PM | அ+அ அ- |

கலால் கொள்கை ஊழல் வழக்கில் 3 தனிநபா்கள் மற்றும் 5 நிறுவனங்களின் பெயா்கள் இடம்பெற்ற அமலாக்க துறையின் இரண்டாவது கூடுதல் குற்றப்பத்திரிகையை கவனத்தில் கொள்வது தொடா்பான விசாரணை தில்லி நீதிமன்றத்தில் வரும் ஏப்ரல் 24-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா் மனீஷ் சிசோடியா தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளாா்.
இதே வழக்கில் தொடா்புடைய ராகவ் மகுண்டா, ராஜேஷ் ஜோஷி, கௌதம் மல்ஹோத்ரா மற்றும் ஐந்து நிறுவனங்கள் ஆகியோருக்கு எதிராக
அமலாக்கத் துறை தாக்கல் செய்த இரண்டாவது கூடுதல் குற்றப்பத்திரிகை மீதான வாதங்களை முன்வைக்க ஏப்ரல் 24 ஆம் தேதியை சிறப்பு நீதிபதி எம்.கே.நாக்பால் சனிக்கிழமை நிா்ணயித்தாா். இது தொடா்பான விவரத்தை
நீதிமன்றத்தில் சிபிஐ சிறப்பு அரசு வழக்கறிஞா் நவீன் குமாா் மட்டா தெரிவித்தாா்.
அமலாக்க வழக்கு தகவல் அறிக்கையில் (இசிஐஆா்) இடம்பெற்றுள்ள குற்றம்சாட்டப்பட்டவா்கள் மற்றும் பிறரது பங்கைக் கண்டறிய மேலதிக விசாரணை நடந்து வருகிறது என்றும் மட்டா நீதிமன்றத்தில் தெரிவித்தாா்.
சிசோடியாவை கைது செய்துள்ள அமலாக்கத்துறை இன்னும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை. ஏறக்குறைய 2000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையில், சாட்சிகள் மற்றும் குற்றம்சாட்டப்பட்ட நபா்களின் வாக்குமூலம் மற்றும் மின்னஞ்சல்கள் மற்றும் பிற தரவுகள் இடம்பெற்றுள்ளது.
சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான வாதங்களின்போது, வழக்கு விசாரணை ஒரு முக்கியமான கட்டத்தில் இருப்பதாகவும், சிசோடியா உடந்தையாக இருந்ததற்கான புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தொடா் வாதங்களை ஏப்ரல் 18 ஆம் தேதி நீதிமன்றம் விசாரிக்க உள்ளது. சிபிஐ விசாரித்து வரும் கலால் ஊழல் தொடா்பான ஊழல் வழக்கில் அவரது ஜாமீன் மனுவை நீதிமன்றம் முன்னா் தள்ளுபடி செய்திருந்தது.