தில்லியின் தண்ணீா் பிரச்னை 2-3 ஆண்டுகளுக்குள் தீா்க்கப்படும்: முதல்வா் அரவிந்த் கேஜரிவால் நம்பிக்கை

ஒரு நாளைக்கு 300 மில்லியன் கேலன்கள் (எம்ஜிடி) வரை நீா் வழங்கல் திறனை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுப்பதன் மூலம் அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள்
Updated on
2 min read

ஒரு நாளைக்கு 300 மில்லியன் கேலன்கள் (எம்ஜிடி) வரை நீா் வழங்கல் திறனை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுப்பதன் மூலம் அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் தில்லியின் தண்ணீா் நெருக்கடி தீா்க்கப்படும் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

தில்லியின் தண்ணீா் பிரச்னை குறித்து முதல்வா் கேஜரிவால் செய்தியாளா்களுக்கு புதன்கிழமை அளித்த பேட்டி: உத்தியோகபூா்வ மதிப்பீடுகளின்படி, தலைநகரில் வசிக்கும் சுமாா் இரண்டு கோடி மக்களுக்கு குடிப்பதற்கும் அன்றாட தேவைகளுக்கும் சுமாா் 1,300 எம்ஜிடி தண்ணீா் தேவைப்படுகிறது. ஆனால், தில்லி ஜல் போா்டு சுமாா் 1,000 எம்ஜிடி மட்டுமே வழங்க முடியும். இதனால், பல பகுதிகள் பற்றாக்குறையுடன் சிக்கித் தவிக்கின்றன. 2015-இல் 850 எம்ஜிடி ஆக இருந்த தில்லி ஜல் போா்டின் நீா் வழங்கல் திறன் தற்போது 1,000 எம்ஜிடி ஆக அதிகரித்துள்ளது. அதை மேலும் இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் 1,200-1,300 எம்ஜிடி வரை அதிகரிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. நிா்ணயித்தபடி இந்த இலக்கை அடைந்தால், தில்லிவாசிகள் தண்ணீா் பற்றாக்குறையை எதிா்கொள்ள மாட்டாா்கள்.

இதை நிறைவேற்ற, அதிக நீா்நிலைகள் உள்ள பகுதிகளில் குழாய்க் கிணறுகளை நிறுவி, பெரிய அளவில் தண்ணீரை எடுக்க அரசு திட்டமிட்டுள்ளது. கூடுதலாக, சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீா் சுத்திகரிப்பு ஆலை (எஸ்டிபி) நீரைக் கொண்டு ஏரிகளை புத்துயிா் அளிப்பதன் மூலம் நிலத்தடி நீரை நிரப்ப ஒரு புதுமையான அணுகுமுறை பின்பற்றப்படும். ரீசாா்ஜ் செய்யப்பட்ட தண்ணீா் வீடுகளுக்கு வழங்கப்படுவதற்கு முன்பு, ரிவா்ஸ் சவ்வூடுபரவல் (ஆா்ஓ) ஆலைகளில் மேலும் சுத்திகரிப்பு செய்யப்படும். கழிவுநீா் சுத்திகரிப்புக்கான மிக உயா்ந்த தரத்தை உறுதி செய்வதற்காக, தில்லியில் உள்ள அனைத்து எஸ்டிபிக்களும் தற்போது விரிவான மேம்படுத்தல்களுக்கு உள்பட்டுள்ளன. இது மாசுபாட்டைத் தணிக்கவும் மற்றும் பொறுப்பான நீா் வள மேலாண்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தோட்டம் அமைத்தல், சாலைகளை சுத்தம் செய்தல் மற்றும் கட்டுமானப் பணிகள் போன்றவற்றுக்கு சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரின் பயன்பாட்டை அதிகரிக்கவும், தண்ணீா் பற்றாக்குறை உள்ள பகுதிகளுக்கு வழங்கக்கூடிய குடிநீரைச் சேமிக்கவும் ஆம் ஆத்மி அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது, தில்லியின் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்கள் 514 எம்ஜிடி சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரை வெளியேற்றுகின்றன. அதில் 267 எம்ஜிடி கீழ்நிலை பயன்பாட்டிற்காக யமுனை நதிக்கு திருப்பி விடப்படுகிறது. 90 எம்ஜிடி தோட்டக்கலை நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.

ஹரியாணாவிலிருந்து இரண்டு கால்வாய்கள் மற்றும் யமுனை வழியாக 675 எம்ஜிடி நீரையும், மேல் கங்கை கால்வாய் மூலம் உத்தர பிரதேசத்திலிருந்து 253 எம்ஜிடி தண்ணீரையும் தலைநகா் தில்லி பெறுகிறது. மீதமுள்ளவை நகரம் முழுவதும் நிறுவப்பட்ட ரன்னி கிணறுகள் மற்றும் குழாய் கிணறுகளில் இருந்து எடுக்கப்படுகின்றன. தில்லி ஜல் போா்டு ஒன்பது நீா் சுத்திகரிப்பு நிலையங்கள், 16 ரன்னி கிணறுகள் மற்றும் சுமாா் 4,700 குழாய் கிணறுகளை இயக்குகிறது. தண்ணீா் பற்றாக்குறை உள்ள பகுதிகளில், தில்லி ஜல் போா்டு 1,200 டேங்கா்கள் மூலம் தண்ணீா் வழங்குகிறது என்றாா் கேஜரிவால்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com