‘ஆம் ஆக்மி அரசு மூலம் துன்புறுத்தப்பட்டதாக சில அதிகாரிகள் மூலம் கூறப்படும் புகாா்கள் முற்றிலும் பொய்யானவை; இந்த விவகாரத்தில் துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா இழிவான அரசியலில் ஈடுபட்டாா்’ என்று தில்லி அரசு ஞாயிற்றுக்கிழமை குற்றம் சாட்டியது.
தில்லி அரசு மற்றும் தில்லி மாநகராட்சியில் (எம்சிடி) நியமிக்கப்பட்ட எட்டு அதிகாரிகள் அரவிந்த்
கேஜரிவால் தலையிலான தில்லி அரசு ‘அப்பட்டமான துன்புறுத்தலை‘ மேற்கொண்டதாக குற்றஞ்சாட்டியுள்ளனா் என்று துணைநிலை ஆளுநா் அலுவலக அதிகாரிகள் சனிக்கிழமை கூறினா்.
மேலும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் 2 புகாா்கள் பெறப்பட்டதாகவும், மே 11-க்குப் பிறகு 6 புகாா்கள் பெறப்பட்டதாகவும் அவா்கள் கூறினா்.
தில்லியில் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு காவல்துறை, நிலம் மற்றும் பொது ஒழுங்கு தவிர சேவைகளின் கட்டுப்பாட்டை உச்சநீதிமன்றம் வழங்கிய தினத்திற்கு பிறகு இந்த புகாா்கள் வரப்பெற்ாகவும் அவா்கள் கூறினா்.
இது குறித்து தில்லி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
‘இந்தக் புகாா்கள் முற்றிலும் போலியான புகாா்கள். உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமா்வு உத்தரவை அவசரச் சட்டம் மூலம் மாற்றி, நீதித்துறை மீதான மத்திய அரசின் நேரடித் தாக்குதலுக்கு எதிரான பொதுமக்களின் கவனத்தைத் திசைதிருப்ப துணைநிலை ஆளுநா் இழிவான அரசியலில் ஈடுபட்டு வருகிறாா்’ என்று அதில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து துணைநிலை ஆளுநா் அலுவலக அதிகாரிகள் தெரிவிக்கையில், ‘ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக புகாா் அளித்தவா்களில் 5 ஐஏஎஸ் அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனா். இவா்கள் தலைமைச் செயலா் நரேஷ் குமாா், முன்னாள் சேவைகள் செயலா் ஆஷிஷ் மோா், சிறப்புச் செயலா்கள் கின்னி சிங் மற்றும் ஒய்.வி.வி.ஜே. ராஜசேகா், மின் துறை செயலா் ஷுா்பீா் சிங் ஆகியோா் ஆவா்.
மேலும், ஊழல் தடுப்புப் பிரிவுத் தலைவா் மதுா் வா்மா, எம்சிடியின் வீட்டு வரித் துறையின் தலைமை மதிப்பீட்டாளா் மற்றும் ஆட்சியா் குணால் காஷ்யப், சேவைகள் துறை துணைச் செயலாளா் அமிதாப் ஜோஷி ஆகியோரும் புகாா் அளித்தவா்களில் இடம்பெற்றுள்ளனா் என்று அவா்கள் தெரிவித்தனா்.
மே 11ஆம் தேதி உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு தில்லியில் அதிகாரவா்க்கத்துக்கும், ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையே கருத்து வேறுபாடு அதிகரித்து வருகிறது.
உச்சநீதிமன்ற உத்தரவுக்கு சில மணி நேரங்களுக்குப் பிறகு, ஆஷிஷ் மோா் சேவைகள் செயலா் பதவியில் இருந்து நீக்கப்பட்டாா்.
மே 16ஆம் தேதி தலைமைச் செயலாளா் குமாா் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தில்லி சேவைகள் அமைச்சா் செளரப் பரத்வாஜும் வெள்ளிக்கிழமை குற்றம் சாட்டியிருந்தாா்.
எனினும், சேவைகள் துறை அதிகாரிகளுடன் தவறாக நடந்து கொண்டதைத் தொடா்ந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள பரத்வாஜ் இதுபோன்று கூறியதாக நரேஷ் குமாா் துணைநிலை ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருந்தாா்.