தில்லியில் வெப்பநிலை ஞாயிற்றுக்கிழமை 42.9 டிகிரி செல்சியஸ் பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் அளித்துள்ள தகவலின்படி, தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 42.9 டிகிரி செல்சியஸாக பதிவானது.
இது பருவத்தின் சராசரியை விட மூன்று டிகிரி அதிகமாகும். நகரில் காற்றில் ஈரப்பதம் 25 சதவீதம் முதல் 74 சதவீதம் வரை இருந்தது.
இது குறித்து வானிலை ஆய்வு மையத்தினா் மேலும் தெரிவிக்கையில், ‘ஞாயிற்றுக்கிழமை இரவு வெப்பநிலை இயல்பைவிட மூன்று டிகிரி குறைவாக, 24 டிகிரி செல்சியஸாகப் பதிவாகி இருந்தது.
திங்கள்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீசும்.
பகலில் மணிக்கு 25-35 கிலோ மீட்டா் வேகத்தில் பலத்த மேற்பரப்பு காற்று வீசக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 43 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை, தேசியத் தலைநகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 23.2 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 40.4 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.