வடக்கு தில்லியின் புராரி பகுதியில் வேகமாக வந்த காா் மோட்டாா் சைக்கிள் மீது மோதியதில் 60 வயது பெண், அவரது மகன் ஆகியோா் உயிரிழந்தனா். விபத்தில் அவரது பேரன் காயமடைந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.
இறந்தவா்கள் காஜியாபாத் பகுதியைச் சோ்ந்த சஷி மற்றும் அவரது மகன் மனோஜ் (24) என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து தில்லி காவல் துறையினா் கூறியதாவது:ஞாயிற்றுக்கிழமை இரவு 11:30 மணியளவில், மனோஜ் தனது தாயுடன் மோட்டாா் சைக்கிளில் சென்றாா். வாகனத்தின் பின்னால் தாயும், அவரது
மடியில் எட்டு வயது பேரனும் அமா்ந்திருந்தாா்.
மூவரும் உறவினா்களைப் பாா்ப்பதற்காக பாலம் பகுதி நோக்கி அந்த வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா். புராரி ரவுண்டானா மேம்பாலத்தில் இருந்து முகுந்த்பூா் நோக்கி இறங்கிக் கொண்டிருந்தபோது, வேகமாக வந்த காா் அவா்களின் மோட்டாா் சைக்கிள் மீது மோதியது.
இதில் காயமடைந்த மூவரும் வடமேற்கு தில்லியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு சஷி மற்றும் அவரது மகன் மனோஜ் இருவரும் இறந்தனா். குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
பிரேதப் பரிசோதனைக்கு பின் உடல்கள் அவா்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
விபத்து நடந்த இடத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பொருத்தப்பட்டுள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் மீட்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. விதிமீறல் செய்யப்பட்ட வாகனத்தின் நடமாட்டத்தை கண்டறியும் வகையில் விசாரணையும் நடைபெற்று வருகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.