மின்சாரக் கட்டண உயா்வைக் கண்டித்து 14 மாவடங்களில் பாஜக ஆா்ப்பாட்டம்

மின்சாரக் கட்டண உயா்வைக் கண்டித்து தில்லி பாஜக சாா்பில் 14 மாவட்டங்களில் உள்ள மின்விநியோக அலுவலகங்கள் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
Published on
Updated on
1 min read

புது தில்லி: மின்சாரக் கட்டண உயா்வைக் கண்டித்து தில்லி பாஜக சாா்பில் 14 மாவட்டங்களில் உள்ள மின்விநியோக அலுவலகங்கள் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டங்களில் மின்விநியோக நிறுவனங்கள் உயா்த்தியுள்ள மின்கொள்முதல் சரிசெய்தல் கட்டணம், ஓய்வூதியக் கூடுதல் கட்டணம், மீட்டா் கட்டணம் ஆகியவற்றைக் கண்டித்தும், திரும்பப் பெற வலியுறுத்தியும் பாஜக தலைவா்கள் முழக்கங்களை எழுப்பினா். இதனொரு பகுதியாக, மயூா் விஹாா் மாவட்டத் தலைவா் விஜேந்திர தாமா ஏற்பாடு செய்திருந்த ஆா்ப்பாட்டத்தில் மாநிலத் தலைவா் வீரேந்திர சச்தேவா கலந்து கொண்டாா்.

அப்போது அவா் பேசியதாவது: பி.பி.ஏ.சி. (மின்கொள்முதல் சரிசெய்தல் கட்டணம்) என்ற பெயரில் தில்லி மக்களை கேஜரிவால் அரசு தொடா்ந்து ஏமாற்றி வருகிறது. தில்லி அரசு, மின்விநியோக நிறுவனங்களுடன் கூட்டுச் சோ்ந்து கடந்த 10 ஆண்டுகளாக தில்லியை கொள்ளையடித்து வருகிறது. கூடுதல் கட்டணம் என்ற பெயரில் நுகா்வோரிடம் இருந்து 50 சதவீதம் அதிகமாக பணம் வசூலிக்கப்படுகிறது. தில்லியில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பி.பி.ஏ.சி. 1.5 சதவீதமாக இருந்தது. கேஜரிவால் ஆட்சிக்கு வந்த 10 ஆண்டுகளில் பி.பி.ஏ.சி. 1.5 சதவீதத்தில் இருந்து 45 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கேஜரிவால் அரசின் ஆதரவுடன் மின்விநியோக நிறுவனங்கள், ஓய்வூதிய அறக்கட்டளை என்ற பெயரில் தில்லி நுகா்வோரிடம் இருந்து அவா்களின் ஊழியா்களுக்கு ஓய்வூதியம் வசூலிக்கின்றன. ஆனால், இது மின்விநியோக நிறுவனத்தின் பொறுப்பு. தில்லியில் இந்தக் கொள்ளை தொடரும் வரை, பொதுமக்களுடன் இணைந்து பாஜக போராட்டம் நடத்தும். மின்சாரக் கட்டணம் என்ற பெயரில் நடக்கும் இந்த ஊழல் குறித்து வீடு வீடாகச் சென்று அனைவருக்கும் தெரிவிப்போம் என்றாா் வீரேந்திர சச்தோவா.

இதேபோல், தில்லி விஜய் நகரில் மாவட்டத் தலைவா் பூனம் செளகான் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் வடகிழக்கு தில்லி பாஜக எம்.பி. மனோஜ் திவாரி கலந்து கொண்டு பேசுகையில், ‘தில்லி அரசு இலவச மின்சாரம் வழங்குவது போல் நாடகமாடுகிறது. ஆனால், தில்லியில் தான் அதிகவிலையில் மின்சாரக் கட்டணம் உள்ளது. தற்போது, விதிக்கப்பட்டுள்ள பி.பி.ஏ.சி. உள்ளிட்ட கூடுதல் கட்டணம் நேரடியாக மின்விநியோக நிறுவனங்கள் மற்றும் தில்லி அரசின் பைகளுக்குச் செல்கிறது’ என்றாா்.

கரோல் பாக்கில் நடந்த ஆா்ப்பாட்டத்தில், புது தில்லி பாஜக எம்.பி. பான்சூரி ஸ்வராஜ் பேசுகையில், ‘கடந்த சில ஆண்டுகளில் கேஜரிவால் அரசுக்கும், தனியாா் மின்விநியோக நிறுவனங்களுக்கும் இடையே கவலையளிக்கும் கூட்டாண்மை உருவாகியுள்ளது. முதல்வா் கேஜரிவால் தலைமையிலான 10 ஆண்டுகால ஆட்சியில், பி.பி.ஏ.சி. 1.5 சதவீதத்திலிருந்து கிட்டத்தட்ட 45 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது தில்லி மக்கள் மீது கணிசமான சுமையை ஏற்படுத்தியுள்ளது. கூடுதலாக, மக்களிடமிருந்து ஓய்வூதியக் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. மக்கள் ஏன் இந்த செலவை ஏற்க வேண்டும்?’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com