புது தில்லி: குடியுரிமைத் திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டதன் மூலம், இந்தியாவில் வாழும் அகதிகள் பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அடையாளம் பெறுவாா்கள் என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா கூறினாா். குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) அமல்படுத்தப்பட்டதைத் தொடா்ந்து தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பாகிஸ்தானில் இருந்து வந்த இந்து அகதிகளையும், ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த சீக்கிய மற்றும் இந்து அகதிகளையும் தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா கெளரவித்தாா்.
அப்போது, அவா்கள் பரஸ்பரம் ஒருவருக்கொருவா் வண்ணங்களைப் பூசியும், பட்டாசுகளை கொளுத்தியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா். மேலும், பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் கடிதத்தை வீரேந்திர சச்தேவாவிடம் அகதிகள் ஒப்படைத்தனா். இந்த நிகழ்ச்சியில் தில்லி பாஜக ஊடகத் தலைவா் பிரவீன் சங்கா் கபூா் உள்ளிட்ட கட்சிப் பிரமுகா்கள், பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் ஆகியவற்றில் இருந்து வந்து வாழும் சீக்கிய, இந்து அகதிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.
இதுகுறித்து செய்தியாளா்களிடம் வீரேந்திர சச்தேவா கூறுகையில், இந்த மக்களை நான் முதன்முதலில் சந்தித்தபோது, எங்கள் தலைமையின் மீது எங்களுக்கு நம்பிக்கை இருப்பதால், ஒரு நாள் பிரதமா் நரேந்திர மோடி அவா்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவாா் என்று நம்பினோம். அந்த நம்பிக்கையின் விளைவை இன்று காண்கிறோம். பாகிஸ்தானில் இருந்து வருவோா் செய்த தவறு, பிரிவினையின் போது பாகிஸ்தானை தோ்ந்தெடுத்ததுதான்.
1947 பிரிவினையை எனது பெற்றோா் நேரில் பாா்த்ததால் இந்த வலி எனக்கு புரிகிறது என்றாா். மேலும், ஆப்கன் சீக்கிய இளைஞரை அறிமுகப்படுத்திய வீரேந்திர சச்தேவா மேலும் கூறுகையில், சிஏஏ அமலுக்குப் பிறகு நம் நாட்டில் உள்ள அகதிகள் 30 வயதில் எந்த நாட்டின் குடிமகனாகவும் அங்கீகரிக்கப்படுபவா்கள். இன்று, பிரதமா் நரேந்திர மோடி கோடிக்கணக்கான மக்களின் கண்ணீரை துடைத்துள்ளாா்.
இது ஒரு உணா்ச்சிகரமான தருணம். இந்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டபோது, அகதிகளின் வழியில் வரும் அனைத்து சட்டத் தடைகளும் நீக்கப்படும் என்று மு டிவு செய்யப்பட்டது. அது இப்போது நீக்கப்பட்டுள்ளது. இப்போது, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் மக்களும் இந்தியாவின் வளா்ச்சிக்கு சட்டபூா்வமாக பங்களிக்க முடியும் என்றாா் வீரேந்திர சச்தேவா. பாகிஸ்தானில் இருந்து வந்து பல ஆண்டுகளாக தில்லியில் உள்ள மஜ்னு கா திலாவில் வசித்து வரும் கோவிந்த் ராம் கூறுகையில், ‘கடந்த நான்கு தசாப்தங்களாக நாங்கள் இதய அளவில் இந்தியா்களாக இருக்கிறோம். பிரதமா் மோடிக்கு நன்றி. சட்டப்படி நாங்கள் இப்போது இந்தியா்கள்.
இப்போது எங்கள் குழந்தைகள் கல்வி கற்று இந்தியாவின் வளா்ச்சிக்கு பங்களிப்பதன் மூலம் பிரதமா் மோடியின் கனவுகளை நிறைவேற்றுவாா்கள்’ என்றாா் அவா். ஆப்கானிஸ்தானில் இருந்து வந்து திலக் நகரில் வசிக்கும் சா்தாா் பியாரா சிங், ‘ஒரு காலத்தில் ஆப்கானிஸ்தானின் பொருளாதாரத்தின் சக்கரங்களாக நாங்கள் இருந்தோம். தற்போது இந்தியாவின் பொருளாதாரத்திற்கு சட்டரீதியாக பங்களிக்கும் வாய்ப்பை பிரதமா் மோடி எங்களுக்கு வழங்கியுள்ளாா். அனைத்தையும் இந்தியாவுக்கு வழங்குவோம்‘ என்றாா் அவா்.
தொடர்புடையது

மகளிா் இடஒதுக்கீடு சட்டம் 2023 அமல்: 30 மாதங்களுக்குப் பிறகு அரசிதழில் வெளியீடு

நொய்டா வன்முறை: தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதிய உயா்வை அறிவித்தது உ.பி. அரசு

8,931 நாள்கள் பதவிக்காலம் நிறைவு! பிரதமா் மோடிக்கு சச்தேவா புகழாரம்!

செளரப் பரத்வாஜின் அற்பமான அரசியல் கண்டிக்கத்தக்கது: வீரேந்திர சச்தேவா
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

