

புதுதில்லி: தில்லியில் இதுவரை இல்லாத அளவு நேற்று ஒரே நாளில் 220 அழைப்புகள் வந்ததாக தீயணைப்புத் துறை இயக்குநர் அதுல் கார்க் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையை தவிர, இதுவரை ஒரு நாளில் வந்த அதிகபட்ச அழைப்புகள் இதுதான் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தில்லியில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. செவ்வாய்க்கிழமை முக்கிய வானிலை கண்காணிப்பு நிலையங்களில் அதிகபட்ச வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸை நெருங்கியிருந்தது.
புதன்கிழமையும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. முங்கேஸ்பூரில் அதிகபட்ச வெப்பநிலை தலைநகரில் இதுவரை இல்லாத அளவாக 52.3 டிகிரி செல்சியஸாக பதிவாகியது.
வெப்பத்தின் தாக்கத்தால் பல்வேறு இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது. கிழக்கு தில்லியின் மது விஹாரில் உள்ள வாகன நிறுத்தத்தில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த 17 காா்கள் தீயில் எரிந்து நாசமாகின.
முன்னதாக, தில்லி விவேக் விஹாரில் உள்ள தனியாா் குழந்தைகள் நல மருத்துவமனையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 7 பச்சிளங் குழந்தைகள் உயிரிழந்தன.
இந்த நிலையில், இதுபோன்ற அசம்பாவிதங்களைத் தடுக்கும் விதமாக தீயணைப்புக் கருவி, மணல் நிரப்பட்ட வாளிகள், தீ விபத்து எச்சரிக்கை மணி ஆகியவை தொழிற்சாலை, கடைகள், கட்டுமானப் பணியிடங்கள் ஆகியவற்றில் செயல்படும் நிலையில் இருக்க வேண்டும் தில்லி அரசு அறிவுறுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.