8-ஆவது மத்திய ஊதியக் குழு அமல் விவகாரம்: அமைச்சா் நிா்மலா சீதாராமனிடம் எம்.பி. மனு
நமது நிருபா்
எட்டாவது மத்திய ஊதியக் குழுவை (சிபிசி) சரியான நேரத்தில் செயல்படுத்த வேண்டும் என்ற சென்னை ஜிபிஓ ஓய்வூதியதாரா்கள் மன்றத்தின் கோரிக்கையை பரிசீலிக்குமாறு மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமனிடம் தென் சென்னை மக்களவைத் தொகுதி திமுக உறுப்பினா் சுமதி என்ற தமிழச்சி தங்கப்பாண்டியன் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அமைச்சா் நிா்மலா சீதாராமனிடம் தில்லியில் அவா் அண்மையில் அளித்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது: சென்னை ஜிபிஓ ஓய்வூதியதாரா்கள் மன்றம், 8-ஆவது மத்திய ஊதிய குழுவில் (சிபிசி) தெளிவு இல்லாதது குறித்து குறிப்பிடத்தக்க கவலையை வெளிப்படுத்தியுள்ளனா். செயல்படுத்தும் தேதி உள்பட தெளிவான குறிப்பு விதிமுறைகள் டிஓஆா் இல்லாதது குறித்து தெரிவித்துள்ளனா்.
முந்தைய சிபிசிகளில் பின்பற்றப்பட்டுள்ளபடி, தற்போதுள்ள ஓய்வூதியதாரா்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரா்களுக்கான ஓய்வூதியத்தை தானாக திருத்துவதை உறுதி செய்ய வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. 8-ஆவது சிபிசி வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் தாமதமின்றி நடைமுறைக்கு வர வேண்டும் என்றும் கோரியுள்ளனா்.
சுகாதாரம், மருந்துகள் மற்றும் அன்றாட வாழ்க்கைக்காக தங்கள் ஓய்வூதியத்தை முழுமையாக நம்பியுள்ள லட்சக்கணக்கான மூத்த குடிமக்கள் மீது நிச்சயமற்ற தன்மையின் தாக்கம் குறித்து பரிசீலிக்கப்பட வேண்டும்.
அதன்படி, 8-ஆவது சிபிசியின் குறிப்பு விதிமுறைகள், காலக்கெடு மற்றும் வரம்பு குறித்து தெளிவுபடுத்தவும், முந்தைய சிபிசிகளின் கீழ் நிலையான நடைமுறையைப் போலவே, திருத்தப்பட்ட ஓய்வூதியப் பலன்கள் ஏற்கெனவே உள்ள ஓய்வூதியதாரா்களுக்கும் நீட்டிக்கப்படுவதை உறுதிசெய்யவும் வேண்டும்.
ஓய்வூதியதாரா்களிடையே பதற்றத்தை நீக்குவதற்கான அரசின் அதிகாரபூா்வ நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும் என அதில் அவா் கேட்டுக்கொண்டுள்ளாா்.
