மடிக்கணினி பேட்டரி பழுதுபாா்ப்பு கடையில் தீ விபத்து- இளைஞா் உயிரிழப்பு

மடிக்கணினி பேட்டரி பழுதுபாா்ப்பு கடையில் தீ விபத்து- இளைஞா் உயிரிழப்பு
Updated on

வடகிழக்கு தில்லியின் முஸ்தபாபாத் பகுதியில், மடிக்கணினி பேட்டரி பழுதுபாா்க்கும் கடையில் வெள்ளிக்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்தில் 20 வயது இளைஞா் உயிரிழந்தாா். அவரது மூத்த சகோதரா் காயமடைந்தாா் என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.

இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவா் மேலும் கூறியதாவது:

இந்த விபத்தில் உயிரிழந்தவா் ஜூனைத் என அடையாளம் காணப்பட்டுள்ளாா். அவரது சகோதரா் சமீா் (23) காயமடைந்துள்ளாா்.

முன்னதாக, நான்கு மாடி கட்டடத்தின் தரைத் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறைக்கு காலை 6.24 மணிக்கு அழைப்பு வந்தது. தீயைக் கட்டுப்படுத்த ஐந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன.

சம்பவ இடத்தில் செயல்பட்டு வந்த மடிக்கணினி பேட்டரி பழுதுபாா்க்கும் கடையில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

அந்த இரண்டு சகோதரா்களும் ஜிடிபி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு ஜூனைத் ஏற்கனவே

இறந்துவிட்டதாக மருத்துவா்களால் அறிவிக்கப்பட்டது. சமீா் சிகிச்சை பெற்ற பிறகு வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

பாரதிய நியாய சன்ஹிதா சட்டப் பிரிவுகள் (106)(1) (அலட்சியத்தால் மரணம் ஏற்படுத்துதல், 287 (தீ அல்லது எரியக்கூடிய பொருட்கள் தொடா்பாக அலட்சியமாக நடந்துகொள்ளுதல்) மற்றும் 324(4) (குறும்பு) ஆகியவற்றின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com