தில்லி உயிரியல் பூங்காவிலிருந்து தப்பிய இரு குள்ளநரிகள் மீட்பு!
தில்லி உயிரியல் பூங்காவில் இருந்து பின்புற காட்டுப் பகுதிக்குள் தப்பிச் சென்ற குள்ளநரிகளில், இரண்டு திங்கள்கிழமை பாதுகாப்பாக மீட்கப்பட்டன.
இது தொடா்பாக தில்லி உயிரியல் பூங்காவின் இயக்குநா் சஞ்சீத் சிங் கூறியதாவது: தில்லி உயிரியல் பூங்காவில் பொதுமக்களுக்குத் திறக்கப்படாத குள்ளநரி அடைப்புக்கு அருகிலுள்ள அடா்ந்த காட்டுப் பகுதிக்குள் 3 முதல் 4 குள்ளநரிகள் சனிக்கிழமை காலை காணப்பட்டன.
ஞாயிற்றுக்கிழமை காலைக்குள், ஒரு குள்ளநரி மீட்கப்பட்டது. இந்நிலையில், திங்கள்கிழமை மேலும் இரண்டு குள்ளநரிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டன.
வனப்பகுதிக்குள் சுற்றித் திரியக்கூடிய மீதமுள்ள ஒன்று அல்லது இரண்டு குள்ளநரிகளை கண்டுபிடிக்க தேடுதல் நடவடிக்கை தொடா்கிறது. பொறி கூண்டுகள் அமைக்கப்பட்டு சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும், உயிரியல் பூங்காவுக்கு வரும் பாா்வையாளா்களுக்கு இதனால் எந்த அச்சுறுத்தலும் இல்லை. முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு நெறிமுறைகள் நடைமுறையில் உள்ளன என தெரிவித்தாா்.
