ரோஹிணி மேற்கு மெட்ரோ நிலையத்தில் ரயில் முன் குதித்து ஒருவா் உயிரிழப்பு

ரோஹிணி மேற்கு மெட்ரோ நிலையத்தில் ரயில் முன் குதித்து ஒருவா் உயிரிழப்பு

Published on

தில்லியின் ரோஹிணி மேற்கு மெட்ரோ நிலையத்தில் 37 வயது நபா் ஒருவா் திங்கள்கிழமை ரயிலின் முன் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கப்படும் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து போலீஸாா் கூறியதாவது: இந்தச் சம்பவத்தில் ரோஹிணி செக்டாா் 2-ஐ சோ்ந்த ஹேமந்த் நேகி என்பவா் இறந்தது தெரிய வந்தது. சம்பவ இடத்தில் தற்கொலைக் குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை.

ரோஹிணி மேற்கு மெட்ரோ நிலையத்தின் கேட் எண் 3 அருகே ஒரு பயணி ரயில் முன் குதித்ததாக மாலை 5.03 மணியளவில் பிசிஆா் அழைப்பு வந்தது.

ஒரு போலீஸ் குழு சம்பவ இடத்திற்குச் சென்றனா். காயமடைந்தவா் ஏற்கெனவே ஆம்புலன்சில் பிஎஸ்ஏ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதைக் கண்டறிந்தனா்.

மருத்துவமனையில் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவா் இறந்துவிட்டதாக மருத்துவா்களால் அறிவிக்கப்பட்டது. ஹேமந்த் நேகியின் மருத்துவ அறிக்கையை பொலீஸாா் சேகரித்தனா்.

முதற்கட்ட விசாரணையில், ஹேமந்த் நேகி மெட்ரோ நிலையத்தை அடைந்து, ரிதாலாவிலிருந்து சிகப்பு வழித்தடத்தில் கஷ்மீரி கேட் நோக்கிச் செல்லும் ரயிலின் முன் குதித்ததாகத் தெரியவந்தது. அவா் காஜியாபாத்தில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளாா்.

குற்றவியல் குழு மற்றும் தடயவியல் நிபுணா்கள் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனா். ஹேமந்த் நேகியின் குடும்ப உறுப்பினா்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com