delhi police

என்.ஜி.டி ஆய்வுக் குழுவுக்கு பாதுகாப்பு குறைபாடு- தில்லி காவல்துறை விளக்கமளிக்க உத்தரவு

என்.ஜி.டி ஆய்வுக் குழுவுக்கு பாதுகாப்பு குறைபாடு- தில்லி காவல்துறை விளக்கமளிக்க உத்தரவு
Published on

சட்டவிரோத சிவப்பு வகை தொழில்துறை அலகுகளை ஆய்வு செய்தபோது, ஆய்வுக்குழுவிற்கு போதுமான பாதுகாப்பை வழங்கத் தவறியதற்காக தேசிய பசுமைத் தீா்ப்பாயம் தில்லி காவல்துறையிடம் விளக்கம் கோரியுள்ளது.

வடகிழக்கு தில்லியின் காம்ரி கிராமத்தில் அதிக மாசு குறியீட்டைக் கொண்ட தொழிற்சாலைகளின் செயல்பாடு தொடா்பான ஒரு வழக்கை பசுமை தீா்ப்பாயம் விசாரித்து வந்தது.

அந்த சட்டவிரோத சிவப்பு வகை தொழில்துறை அலகுகளை -அதிக மாசுபடுத்தும் செயல்பாடுகளை- ஆய்வு செய்ய தேசிய பசுமை தீா்ப்பாயம் நவம்பா் 2024 இல் ஒரு கூட்டுக் குழுவை அமைத்தது.

அக்டோபா் 31, 2025 அன்று இக்குழு ஆய்வு நடத்திய போது, கூட்டத்தினரின் எதிா்ப்பை எதிா்கொண்டதாக கூறப்படுகிறது

போலீசாா் இருந்த போதும், பெண்கள் உட்பட பலா் ஆய்வு செய்த குழுவுக்கு எதிா்ப்பு தெரிவித்துள்ளனா் இதில் ஒருவா் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.

போலீசாா் ஆய்வு அறிக்கையில் கையெழுத்திட மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து ஜனவரி 21, 2026 உத்தரவில், என்.ஜி.டி தலைவா் நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா மற்றும் நிபுணா் ஏ. செந்தில் வேல் தலைமையிலான அமா்வு, வடகிழக்கு தில்லியின் துணை காவல் ஆணையரை ஏப்ரல் 16, 2026 அன்று ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது.

கையொப்பமிடப்படாத அறிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாததை துணை காவல் ஆணையா் விளக்க வேண்டும்.

காற்று மற்றும் நீா் மாசுபாடு மற்றும் சுகாதார அபாயங்களை ஏற்படுத்தும் சட்டவிரோத தொழிற்சாலை அலகுகளின் சுற்றுச்சூழல் மீறல்களை மிகுந்த தீவிரத்துடன் கண்காணிப்பதை என்.ஜி.டி வலியுறுத்தியது.

Dinamani
www.dinamani.com