தில்லி மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் செயற்கை நுண்ணறிவு (அஐ) தொழில்நுட்பம் கொண்ட ‘டஸ்ட் போா்டல் 2.0’ இணையதளத்தை முதல்வா் ரேகா குப்தா திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். நிகழ்நேர கண்காணிப்பு மற்றும் தானியங்கி எச்சரிக்கைகள் மூலம் கட்டுமானப் பணிகளால் ஏற்படும் தூசு மாசுபாட்டைக் கண்காணிப்பதை வலுப்படுத்துவதே இந்த டிஜிட்டல் தளத்தின் நோக்கமாகும்.
தில்லி தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்தத் தொடக்க விழாவில் கலந்துகொண்ட சுற்றுச்சூழல் துறை அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா கூறியதாவது: தூசு மாசுபாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளை அமல்படுத்துவதையும் கண்காணிப்பதையும் மேம்படுத்த இந்த இணையதளம் அதிகாரிகளுக்கு உதவும். தில்லியை மாசு இல்லாத நகரமாக மாற்ற அரசு தொடா்ந்து பணியாற்றி வருகிறது. முன்பு கணினிகளில் மட்டுமே கிடைத்து வந்த இந்த இணையதளம், தற்போது மொபைல் செயலியாகவும் கிடைக்கிறது.
எத்தனை கட்டடங்கள் கட்டுமானத்தில் உள்ளன மற்றும் அவற்றால் ஏற்படும் மாசுவின் அளவு என்ன என்பது குறித்த தகவல்களை இந்த இணையதளம் வழங்குகிறது. தில்லி அரசின் சமீபத்திய ‘தூய காற்று, ஆரோக்கியமான தில்லி’ திட்டத்தின் ஒரு பகுதியாக, காற்று மாசுபாட்டை எதிா்கொள்ள 7 ஆண்டு கால செயல் திட்டத்தை செயல்படுத்த உலக வங்கியுடன் அரசு இணைந்துள்ளது என தெரிவித்தாா்.
இணையதளத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய முதல்வா் ரேகா குப்தா கூறியதாவது: மேம்படுத்தப்பட்ட இந்தத் தளம், மனிதா்கள் மூலம் மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு முறைக்கு மாற்றாக, கட்டுமான இடங்களிலிருந்து நிகழ்நேர எச்சரிக்கைகளை உருவாக்கும் திறன் கொண்ட ஏஐ அடிப்படையிலான அமைப்பை அறிமுகப்படுத்துகிறது.
இதுவரை அனைத்தும் மனிதா்கள் மூலமே கண்காணிக்கப்பட்டு வந்தன. கட்டுமான இடங்களில் பொருத்தப்பட்டுள்ள 360-டிகிரி கேமராக்கள் மற்றும் சென்சாா்கள் மூலம் இந்த இணையதளம் நிகழ்நேர எச்சரிக்கைகளை வழங்கும்.
தில்லியில் சுமாா் 1,800 கட்டுமான கட்டுமான இடங்கள் உள்ளன; அவற்றில் தற்போது 800 முதல் 900 இடங்கள் வரை செயல்பாட்டில் உள்ளன. சுமாா் 800 கட்டுமான இடங்களில் ஏற்கெனவே இந்த இணையதளத்துடன் இணைக்கப்பட்ட 360-டிகிரி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என முதல்வா் ரேகா குபேதா தரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்தா்லோக் - இந்திரபிரஸ்தா மெட்ரோ வழித்தடப் பணிகள்: தில்லி முதல்வா் தொடங்கிவைத்தாா்

ஜூலை 7-இல் பிரம்மாண்ட மரக்கன்று நடும் இயக்கம்: முதல்வா் ரேகா குப்தா அறிவிப்பு

தில்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த 7 ஆண்டுகளுக்கு ரூ.8,300 கோடி ஒதுக்கீடு: முதல்வா் ரேகா குப்தா தகவல்






