மின்வாரிய ஊழியர்களுக்கு எப்போது தீபாவளி ?

திருநெல்வேலி, அக். 29: தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்களுக்கு, ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி சம்பள உயர்வு வழங்கப்படாததால் அவர்கள் வருத்தத்தில் உள்ளனர்.   ஊதிய உயர்வு, அவர்களுக்கு தீபாவளி பரிசாக
Updated on
2 min read

திருநெல்வேலி, அக். 29: தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்களுக்கு, ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி சம்பள உயர்வு வழங்கப்படாததால் அவர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

  ஊதிய உயர்வு, அவர்களுக்கு தீபாவளி பரிசாக இருக்கும் என மாநில மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி தெரிவித்திருந்தார். ஆனால் தீபாவளி முடிந்து இரண்டு வார காலம் ஆகியும் ஊதிய உயர்வு இதுவரை அளிக்கப்படவில்லை.

  ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி அரசு ஊழியர்களுக்கு கடந்த ஜூன் முதல் சம்பளம் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. சுமார் 30 சதவீதம் அளவில் இந்த உயர்வு உள்ளது.

  தமிழக அரசு நிறுவனங்களில் பழமையான ஒன்றான தமிழ்நாடு மின்சார வாரியம் 1957-ல் உருவாக்கப்பட்ட போது, சுமார் 1.10 லட்சம் ஊழியர்கள் இருந்தனர். ஆனால் காலி இடங்கள் நிரப்பப்படாததால் தற்போது 64,772 முழு நேர ஊழியர்கள் மட்டுமே உள்ளனர்.

  இவர்கள் தவிர 16,166 ஒப்பந்த தொழிலாளர்கள், 5,516 பகுதி நேரப் பணியாளர்கள், மின்கம்பம் தயாரிக்கும் துறையில் 316 ஊழியர்கள் என மிகப் பெரிய அமைப்பாக மின்வாரியம் செயல்பட்டு வருகிறது.

  இவர்களுக்கு ஊதிய உயர்வை அமல்படுத்தினால் நிரந்தர ஊழியர்களுக்கு ரூ. 600 கோடியும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ரூ. 400 கோடியுமாக மொத்தம் ஆண்டுக்கு சுமார் ரூ. 1,000 கோடி கூடுதலாக செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

  நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றி வரும் மின்துறை, கடந்த ஏழெட்டு ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வருகிறது. அதன் தற்போதைய ஒட்டுமொத்த நஷ்டம் சுமார் ரூ. 7,000 கோடி ஆகும்.

  மின் உற்பத்தி செலவில் இருந்து நுகர்வோருக்கு குறைவான விலையில் விநியோகம், விவசாயத்திற்கு இலவச மின்சாரம் போன்றவற்றால் வாரியத்தின் வருமானம் குறைந்து இந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மின்வாரிய வட்டாரங்களில் கூறப்படுகிறது.

  மின்வாரியத்தின் மின் உற்பத்தி திறன் 10,214 மெகாவாட் ஆகும். நாளுக்கு நாள் மின் தேவை அதிகரித்து வருவதால் மின்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

   பற்றாக்குறையை சமாளிக்க 2 மணி நேர மின்தடை, தவிர வெளி மாநிலங்களில் இருந்து யூனிட் ஒன்றுக்கு ரூ. 10 வீதம் 300 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. அதுவும் குறைந்த விலைக்கே விநியோகம் செய்யப்படுகிறது. அதிலும் நஷ்டம்.

  இந்நிலையில், மின்வாரிய ஊழியர்கள் கேட்ட 25 சதவீத போனஸýக்குப் பதிலாக இந்த ஆண்டு 20 சதவீத போனஸ் அளிக்கப்பட்டுள்ளது. மின்வாரியத்தின் நஷ்டத்தை கருத்தில் கொண்டு கூடுதல் போனஸ் அளிக்க இயலாது என மின்துறை அமைச்சர் தெரிவித்து விட்டார். இந்நிலையில் ஊதிய உயர்வும் கேள்விக் குறியாகியுள்ளது.

  மின்வாரியத்தை மூன்றாகப் பிரித்து தனியார் மயமாக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது. ஊதிய உயர்வு வழங்கினால் அதே ஊதியத்தை தனியார் நிறுவனமும் அளிக்க வேண்டியிருக்கும். அதற்கு தனியார் சம்மதிக்க மாட்டார்கள். எனவே, ஊதிய உயர்வை அரசு தள்ளிப்போட்டு வருகிறது என தொழிற்சங்கத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.

  ""மின்வாரியத்தின் தற்போதைய நிதி நிலையைக் கருத்தில் கொண்டால் ஊதிய உயர்வுக்கு நிதித்துறை செயலர் அனுமதி அளிக்க மாட்டார். உலக வங்கி உள்ளிட்ட பெரிய நிதி நிறுவனங்கள் ஏதேனும் கடனுதவி அளித்தால்தான் ஊதிய உயர்வு சாத்தியமாகும்.

  ஆனால், தற்போதுள்ள நஷ்டத்தை உன்னிப்பாகப் பார்த்தால் எந்த நிதி நிறுவனமும் கடன் கொடுக்க முன்வராது. அதனால்தான் ஊதிய உயர்வு அறிவிப்பு கேள்விக் குறியாகியுள்ளது'' என மின்வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

  மொத்தத்தில் மின்வாரிய ஊழியர்களுக்கான ஆறாவது ஊதியக் குழு பரிந்துரை இருளாகவே இருந்துவருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com