மார்த்தாண்ட வர்மா மகாராஜாவின் தளபதி அனந்த பத்மநாபன் நாடாரின் 266ஆவது நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சியினர் செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தினர்.
திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மா மகாராஜாவின் பிரதான தளபதியாக இருந்தவர் அனந்தபத்மநாபன் நாடார் (1698-1750). இவர் மார்த்தாண்ட வர்மா மகாராஜா அரியணை ஏற உதவி செய்துள்ளதாகவும், முதன்மை தளபதியாக இருந்துள்ளதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. 1741இல் நடைபெற்ற குளச்சல் போரில் டச்சுப் படையை தோற்கடித்து டிலனாயை கைது செய்ததில் அனந்தபத்மநாபன் நாடாருக்கு முக்கிய பங்கு இருந்துள்ளது. இவரது வீரத்தைப் பாராட்டி மன்னர் மார்த்தாண்ட வர்மா ஏராளமான நிலபுலன்களை பரிசாகக் கொடுத்துள்ளார்.
அனந்த பத்மநாபன் நாடாரின் நினைவிடம் திருவட்டாறு அருகே கண்ணனூர் தச்சன் விளையில் உள்ளது. அவரது நினைவிடத்தில் பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர். தனபாலன், நாம் தமிழர் கட்சியினர் மற்றும் பத்மநாபபுரம் பேரவைத் தொகுதி உறுப்பினர் டி. மனோதங்கராஜ் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.