நித்திரவிளை, மார்த்தாண்டம் வழியாக கேரளத்துக்கு காரில் கடத்திச் செல்ல முயன்ற 500 லிட்டர் ரேஷன் மண்ணெண்ணெய், 800 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.
மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியர் ஜாண் அலெக்ஸாண்டர், துணை வட்டாட்சியர் சந்திரசேகர், வருவாய் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், ஊழியர் ஜாண்பிரைட் ஆகியோர் புதன்கிழமை அதிகாலையில் நித்திரவிளை அருகேயுள்ள பூத்துறையில் வாகன கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தும்படி சைகை காட்டியும், அந்தக் கார் நிற்காமல் சென்றது. இதையடுத்து அதிகாரிகள் வாகனத்தில் காரை துரத்திச் சென்று நித்திரவிளையில் மடக்கினர். எனினும், கார் ஓட்டுநர் தப்பிவிட்டாராம்.
அந்தக் காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500 லிட்டர் ரேஷன் மண்ணெண்ணெயை பறிமுதல் செய்து மார்த்தாண்டத்தில் உள்ள மண்ணெண்ணெய் விநியோக மையத்தில் ஒப்படைத்தனர்.
மேலும், இந்த அதிகாரிகள் குழு கருங்கல் அருகேயுள்ள பாலப்பள்ளம் பகுதியில் மேற்கொண்ட வாகனச் சோதனையில் நிறுத்தாமல் சென்ற காரை மார்த்தாண்டம் பகுதியில் மடக்கிப் பிடித்து, அதிலிருந்த 800 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
காரில் வந்த கேரள மாநிலம், அமரவிளை பகுதியைச் சேர்ந்த அனீஷ் (25), கணேஷ் (30) ஆகியோரை மாவட்ட உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸ் மூலம் கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர்.
இரு சம்பவத்திலும் பிடிபட்ட இரு கார்கள் விளவங்கோடு வட்டாட்சியர் அலுவலகத்திலும், ரேஷன் அரிசி காப்புக்காடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கிலும் ஒப்படைக்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.