குமரி மாவட்டம், ஆலங்கோட்டில் சி.எஸ்.ஐ. காப்பகத்தில் மனவளர்ச்சி குன்றிய சிறுமி சித்திரவதை செய்யப்பட்ட சம்பவத்தில், காப்பகத்திடம் விளக்கம் கேட்டு மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மேலும், அரசு மருத்துவக் குழுவினர் காப்பகத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 24) ஆய்வுசெய்ய மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே உத்தரவிட்டுள்ளார்.
குமரி மாவட்டம், திங்கள்நகர் அருகேயுள்ள ஆலங்கோட்டில் சி.எஸ்.ஐ. மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் காப்பகம் உள்ளது. இந்த காப்பகத்தில் இருந்த 17 வயது சிறுமி உடலில் சூடுவைத்து சித்திரவதை செய்யப்பட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, காப்பகத்திற்குள் சோதனை நடத்திய குழந்தைகள்நல பாதுகாப்பு அதிகாரி குமுதா தலைமையிலான அலுவலர்கள், தீக்காயத்துடன் காணப்பட்ட சிறுமியை மீட்டு, நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மேலும், காப்பக வார்டன் ஜெப பிரியா (45), சமையலர் சரோஜா (50) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். காப்பகப் பொறுப்பாளர் ராஜேஷ் சத்யாவை போலீஸார் தேடிவருகின்றனர். காப்பக நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, நாகர்கோவில் கோணத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரின் வீட்டை பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், திங்கள்கிழமை 2 ஆவது நாளாக காப்பக நிர்வாகிகளிடம் குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு சிகிச்சை அளிக்க ஆண் மருத்துவர்கள், மற்றும் ஆண் மருத்துவப் பணியாளர்கள் சென்றபோது அச்சத்தில் சிறுமி அழுதுள்ளார். இதனால், சிறுமி பாலியல் சித்திரவதை செய்யப்பட்டாரா என்ற சந்தேகமும் குழந்தைகள் நல அலுவலர்களுக்கு ஏற்பட்டுள்ளது. சிறுமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சிறுமி தங்கியிருந்த ஆலங்கோடு சி.எஸ்.ஐ. காப்பகத்திற்கு மாவட்ட நிர்வாகம் தரப்பில் விளக்கம் கேட்டு திங்கள்கிழமை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும், அந்த காப்பகத்தில் உள்ள பிற மாணவிகள், சிறுவர்கள் உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ துன்புறுத்தப்பட்டனரா எனவும் அரசு மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் செவ்வாய்க்கிழமை பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் இதுபோன்று சிறுமியர் சித்திரவதை, பாலியல் கொடுமை நிகழாமல் தடுக்கும் வகையில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழந்தைகள் நல அலுவலர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கதிர்வேல் மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காப்பக பொறுப்பாளர்களையும் அழைத்து, ஒழுங்கு நடவடிக்கை மற்றும் விதிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்றுவது குறித்த ஆய்வுக் கூட்டம் நடத்தவும், அனைத்து காப்பகத்திலும் சோதனை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









