ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்ட தென்னை விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளர் இ.லெட்சுமணன்.
நாகர்கோவில் அருகேயுள்ள கணியான்குளம் பண்டாரந்தோப்பு பகுதியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை பிரசாரத்தை தொடங்கிய அவர், கணியான்குளம், இலந்தையடி ரயில் நிலையம், பள்ளிவிளை, மேலசங்கரன்குழி, கணபதிபுரம், சுண்டப்பற்றி விளை, வெள்ளமோடிவிளை, ஈத்தாமொழி, பொழிக்கரை உள்ளிட்ட பகுதிகளில் வீதி, வீதியாக திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசியது: ஒக்கி புயலின்போது தென்னை விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். மத்திய, மாநில அரசுகள் அவர்களுக்கு போதிய நிவாரணம் வழங்கவில்லை. காங்கிரஸ் கட்சியும், மீனவர்கள், விவசாயிகளுக்கு இதுவரை எதுவும் செய்யவில்லை.
அமமுக வெ"ற்றி பெற்றால் தென்னை விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தொகையை பெற்றுக்கொடுப்போம். இந்த பகுதியில் தென்னை விவசாயம் மேம்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.
பிரசாரத்தில், மாவட்டச் செயலர் பச்சைமால், முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன், நாகர்கோவில் நகரச் செயலர் அட்சயா கண்ணன் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.