மக்களுக்காக தொடர்ந்து உழைப்பேன்: பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன்
By DIN | Published On : 17th April 2019 09:00 AM | Last Updated : 17th April 2019 09:00 AM | அ+அ அ- |

என்னை நம்பி வாக்களிக்கும் மக்களுக்காக தொடர்ந்து உழைப்பேன் என்றார் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளரும், மத்திய இணை அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன்.
தேர்தல் பிரசாரத்தின் நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை மாலையில் பிரசாரம் மேற்கொண்ட அவர், நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் பேசியது: கன்னியாகுமரி தொகுதியில் நான் செய்த பணிகள் குறித்து நீங்கள் அறிவீர்கள். மாவட்டத்தில் இதுவரை மக்களவை உறுப்பினர்களாக இருந்தவர்கள் செய்தது என்ன? நான் கடந்த 5 ஆண்டுகளில் செய்தது என்ன? என்று மக்களாகிய நீங்கள் சீர்தூக்கிப் பாருங்கள்.
இந்தத் தேர்தலில் நீங்கள் தாமரைக்கு அளிக்கக்கூடிய வாக்கு உங்கள் குடும்பத்தின் இளைஞர்களின் எதிர்காலத்துக்கு அளிக்கும் வாக்கு. மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி அமையப்போவது 100க்கு 200 சதவீதம் உறுதியாகி விட்டது.
கடந்த முறை என்னை நம்பி நீங்கள் வாக்களித்ததற்கு இந்தத் தொகுதியில் ரூ. 40 ஆயிரம் கோடி மதிப்பில் திட்டங்களை கொண்டு வந்து குவித்துள்ளேன். இந்த முறையும் நீங்கள் தாமரைக்கு வாக்களித்தால் உங்களுக்காக தொடர்ந்து உழைப்பேன். நம்பி வாக்களியுங்கள். நான் வாழ வைப்பேன் என்றார் அவர்.
பிரசாரத்தில், தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம், குமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலர் எஸ்.ஏ. அசோகன், நகர அதிமுக செயலர் சந்துரு, முன்னாள் எம்எல்ஏ ராஜன், மாவட்ட பாஜக தலைவர் முத்துகிருஷ்ணன், துணைத் தலைவர் முத்துராமன், நாகர்கோவில் நகர்மன்ற முன்னாள் தலைவி மீனாதேவ், நாகர்கோவில் நகர பாஜக தலைவர் நாகராஜன், முன்னாள் தலைவர் ராஜன், உமாரதிராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...