நாட்டில் மத நல்லிணக்கம் தொடர்ந்து காப்பாற்றப்பட வேண்டும் என்றார் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளர் இ.லட்சுமணன்.
நாகர்கோவில் செட்டிக்குளம் சந்திப்பில் தனது பிரசாரத்தை செவ்வாய்க்கிழமை மாலையில் நிறைவு செய்து அவர் பேசியது:
கன்னியாகுமரி தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்குத்குதான் வெற்றி வாய்ப்பு என்று உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆன்மிகவாதிகள் ஆன்மிகப் பணியை செய்யவேண்டுமே தவிர, அரசியல் செய்யக்கூடாது. கடந்த 5 ஆண்டுகாலம் போராட்டம் நடத்தி அரசியல் செய்வது அரசியல்வாதிகள். ஆனால், யாரோ சில ஆன்மிகவாதிகள் மக்களை வாக்களிக்க நிர்ப்பந்திப்பது ஏன்? இவர்களுக்கு வாக்களிக்காதீர்கள் என்று சொல்வதற்கு இவர்கள் யார்? இந்திய ஜனநாயகத்துக்கு அறைகூவல் விடுக்கும் வகையில் செயல்படும் இவர்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அமமுக தேர்தலில் போட்டி என்று அறிவித்தவுடன் இங்கு பாஜகவுக்கு வேலை இல்லாமல் போய்விட்டது. ஆனால், காங்கிரஸ் வெற்றி பெற தற்போது பாஜகவின் பெயரை தவறாகப் பயன்படுத்துகின்றனர். ஆனால், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மத ரீதியாக பிரசாரத்தில் என்றுமே ஈடுபட்டது இல்லை. இது, அனைத்து மதங்களையும் மதிக்கும் கட்சி. எனவே, நீங்கள் அனைவரும் அமமுகவுக்கு வாக்களித்து மத நல்லிணக்கத்தை காப்பாற்றுங்கள் என்றார் அவர். பிரசாரத்தில் அமமுக குமரி கிழக்கு மாவட்டச் செயலர் பச்சைமால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.