பாழாகி வரும் பழையாற்றை சீரமைக்க தமிழுறவு மன்றம் வலியுறுத்தல்
By DIN | Published On : 04th August 2019 12:59 AM | Last Updated : 04th August 2019 12:59 AM | அ+அ அ- |

பாழாகி வரும் பழையாற்றை மக்களுக்கு பயன்தரும் வகையில் சீரமைக்க வேண்டும் என பன்னாட்டு தமிழுறவு மன்றக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
நாகர்கோவிலில் நடைபெற்ற அமைப்பின் ஆலோசனைக் கூட்டம், கவிமணி தேசிக விநாயகம்பிள்ளையின் 144 ஆவது பிறந்ததின விழாவுக்கு அமைப்பின் தலைவர் கோ.முத்துகருப்பன் தலைமை வகித்தார். சிவ.பத்மநாபன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கவிமணி மன்றச் செயலர் மு. சிவதாணு, எழுத்தாளர் சங்கத் துணைத்தலைவர் சொக்கலிங்கம்பிள்ளை, பொருளாளர் பொன்.மகாதேவன், கவிமணி நற்பணி மன்றத் தலைவர் ப.மாதேவன்பிள்ளை, எழுத்தாளர் பட்டத்தி மைந்தன், நன்னெறி மன்றத் தலைவர் ரவீந்திரன் உள்ளிட்டோர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை குறித்துப் பேசினர்.
தீர்மானங்கள்: தமிழகத்தில் தமிழ் மொழிக்கு முதலிடம் அளித்து பிளஸ் 2 வரை தமிழ் மொழியை கட்டாயப் பாடமாக கற்பிக்க அரசு உத்தரவிட வேண்டும்; புதிய கல்விக் கொள்கையின்படி சிறுவர்களுக்கு கல்விச் சுமையினை அதிகரிக்கக்கூடாது; பிளஸ் 2 பாடத்தில் ஆங்கில பாடத்தில் தமிழை விட
சம்ஸ்கிருதம் தொன்மையான மொழி என்ற கருத்தை நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவிப்பது; தமிழகத்தில் நீர் நிலைகளை தூர் வாரும் பணிக்கு பாராட்டு தெரிவிப்பது, கன்னியாகுமரி மாவட்டத்தில் பரளியாற்றின் கடைசி பகுதியாக கருதப்படும் பழையாறு ஆக்கிரமிப்பின் பிடியில் அசுத்துமாக காணப்படுகிறது.
ஆக்கிரமிப்புகளை அகற்றி இந்த ஆற்றை தூய்மைப்படுத்துவதோடு, பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழறிஞர் சி.பா. அய்யப்பன்பிள்ளை வரவேற்றார். சிவன்பிள்ளை நன்றி கூறினார்.