தோவாளை இரட்டைக் கொலை வழக்கு: 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது
By DIN | Published On : 28th March 2019 06:21 AM | Last Updated : 28th March 2019 06:22 AM | அ+அ அ- |

தோவாளையில் சொத்து தகராறில் தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
நாகர்கோவில் அருகே உள்ள தோவாளை கிருஷ்ணன்புதூர் அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முத்து என்ற மணிகண்டன் (48), இவர் தோவாளை பூ மார்க்கெட்டில் பூ வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி கல்யாணி (40). இவர்களது மகள்ஆர்த்தி என்ற லட்சுமி (16) . இவர் பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் லட்சுமி 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் தேதி இரவு 10 மணி அளவில் மணிகண்டன் வீட்டில் புகுந்த 4 பேர் கும்பல் மணிகண்டன் அவரது மனைவி கல்யாணி ஆகியோரை அரிவாளால் வெட்டியது. இதை தடுக்க வந்த ஆர்த்திக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் கல்யாணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மணிகண்டன் உயிரிழந்தார்.
இது குறித்து தோவாளை போலீஸார் வழக்குப் பதிந்து, கல்யாணியின் சகோதரர் சுடலையாண்டி (45) மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த சகோதரர்கள் ராஜ்குமார் (38), ராஜா (41), அய்யப்பன் (36) மற்றும் சகாயஷாஜி ஜெனீஸ் (24) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்களில் கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் மீது பல கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இதைத்தொடர்ந்து, சுடலையாண்டி தவிர மற்ற 4 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே புதன்கிழமை உத்தரவிட்டார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...