மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மார்த்தாண்டம் சாங்கை பகுதியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு, காங்கிரஸ் கட்சியின் கன்னியாகுமரி மேற்கு மாவட்டத் தலைவர் எஸ். ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். குமரி மேற்கு மாவட்ட திமுக செயலர் மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ., மாவட்ட திமுக அவைத் தலைவர் பப்புசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் ஆர். செல்லசுவாமி, முன்னாள் எம்.எல்.ஏ. லீமாரோஸ், மதிமுக ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் அ. ஜெயராஜ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மேற்கு மாவட்டச் செயலர் மாத்தூர் சி. ஜெயன், சமத்துவ மக்கள் கழக மாவட்டச் செயலாளர் தங்கப்பன், மதிமுக நிர்வாகி ஜெயச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் எச். வசந்தகுமாரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யும் வகையில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.