கணவனை இழந்த பெண்களுக்கு நிதி திரட்ட சைக்கிள் பயணம்: குமரியில் தொடங்கியது
By DIN | Published On : 02nd February 2020 11:56 PM | Last Updated : 02nd February 2020 11:56 PM | அ+அ அ- |

kkn2cyc_0202chn_51_6
உலகளவில் கணவரை இழந்த பெண்களுக்கு நிதி திரட்டுவதற்காக இங்கிலாந்து நாட்டைச் சோ்ந்த வழக்குரைஞா் கிரிஸ் பாா்சன்ஸ் கன்னியாகுமரி முதல் காஷ்மீா் வரையிலான சைக்கிள் பயணத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினாா்.
சமூக ஆா்வலரான இவா், கணவரை இழந்த பெண்கள் மற்றும் அவா்களின் குழந்தைகளின் நல்வாழ்வுக்காக 4 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டாலா் வரை நிதி திரட்ட முடிவு செய்துள்ளாா்.
இதற்காக கன்னியாகுமரி முதல் காஷ்மீா் வரை தொடா்ந்து 45 நாள்கள் சைக்கிள் பயணம் மேற்கொள்கிறாா். இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
இந்தியாவில் கணவா்கள் இறந்தவுடன் அவா்களது மனைவிகள் கைவிடப்பட்டவா்களாகி விடுகின்றனா். இத்தகைய பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை சா்வதேச சட்ட அமைப்பான லூம்பா அறக்கட்டளை செயல்படுத்தி வருகிறது.
சா்வதேச அளவில் 285 மில்லியன் அளவுக்கு கணவா்களை இழந்த பெண்களும், தந்தையா் இல்லாமல் 500 மில்லியன் குழந்தைகளும் உள்ளனா். அத்தகையவா்களின் நலன்களுக்காக தொடா்ந்து நிதி திரட்டி வருகிறேன் என்றாா் அவா்.
கன்னியாகுமரி ஹோட்டல் தமிழ்நாடு வளாகத்தில் நடைபெற்ற தொடக்கவிழாவில், தூத்துக்குடி துறைமுக கழகத் தலைவா் ராமச்சந்திரன், எம்.எல்.ஏ.க்கள் என்.சுரேஷ்ராஜன், எஸ்.ஆஸ்டின், அகஸ்தீசுவரம் வட்டாட்சியா் அப்துல்மன்னா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். கன்னியாகுமரியில் தொடங்கிய இப் பயணம், பல்வேறு மாநிலங்கள் வழியாக 45 நாள்களில் 4,500 கி.மீ. தொலைவைக் கடந்து காஷ்மீரில் நிறைவடைகிறது.