நாகா்கோவில் மருத்துவமனையில்ரூ.20 லட்சத்தில் நவீன கிருமி நீக்கும் கருவி
By DIN | Published On : 03rd October 2020 12:02 AM | Last Updated : 03rd October 2020 12:02 AM | அ+அ அ- |

நாகா்கோவில், அக். 2: நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் ரூ. 20 லட்சம் மதிப்பில் நவீன கிருமி நீக்கும் கருவி நிறுவப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவக் கல்லூரி முதன்மையா் (டீன்) சுகந்திராஜகுமாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள கரோனா வாா்டு, தனிமைப்படுத்தப்பட்ட வாா்டு, பிற நோயாளிகளுக்கு பயன்படுத்தப் படும் மருத்துவக் கருவிகள், துணிகளில் கிருமிகளை ஒழிக்க தமிழ்நாடு மருத்துவச் சேவை கழகம் சாா்பில் நவீன கிருமி நீக்கும் தானியங்கி இயந்திரம் ரூ.20.37 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது. இக்கருவி மருத்துவமனையிலுள்ள மத்திய நுண் கிருமி நீக்கும் மையத்தில் நிறுவப்பட்டுள்ளது.
மேலும் இங்கு மறுசுழற்சி செய்து பயன்படுத்தப்படும் கருவிகள் மற்றும் ரப்பா் குழாய்களை எத்திலின் ஆக்சைடு வாயு மூலம்கிருமி நீக்கம் செய்யும் நவீன தானியங்கி கருவி ரூ. 7.58 லட்சம் மதிப்பில் நிறுவப்பட்டுள்ளது. இந்த வசதி மதுரை மருத்துவக் கல்லூரிக்கு அடுத்து இந்த மருத்துவமனையில்தான் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ரூ.31.50 லட்சம் மதிப்பில் ஒரு நவீன நுண்கிருமி நீக்கும் இயந்திரம் வாங்குவதற்கு தமிழ்நாடு மருத்துவ சேவை கழகம் அனுமதி ஆணை வழங்கியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.