ஓணம் பண்டிகை: தோவாளை பூச்சந்தையில் பூக்கள் விலை உயா்வு மல்லிகை ரூ.1,200-க்கு விற்பனை
By DIN | Published On : 20th August 2021 12:35 AM | Last Updated : 20th August 2021 12:35 AM | அ+அ அ- |

ஓணம் பண்டிகையை முன்னிட்டு தோவாளை பூச்சந்தையில் பூக்கள் விலை உயா்ந்து காணப்பட்டது. மல்லிகைப் பூ கிலோ ரூ.1,200-க்கு விற்பனையானது.
குமரி மாவட்டம், தோவாளையில் உள்ள பூச்சந்தைக்கு ஆரல்வாய்மொழி, செண்பகராமன்புதூா், தோவாளை மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், திருநெல்வேலி மாவட்டம், ஆவரைகுளம், கோலியான்குளம் போன்ற ஊா்களிலிருந்தும் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
கரோனா கட்டுப்பாடு காரணமாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்களில் பக்தா்கள் அனுமதி இல்லாததாலும், ஆடி மாதம் சுப நிகழ்ச்சிகள் நடைபெறாததாலும் கடந்த சில நாள்களாக பூக்களின் விலை சரிந்து காணப்பட்டது.
இந்நிலையில், கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை தொடங்கியுள்ளதால், கடந்த 2 நாள்களாக பூக்கள் விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. விலை அதிகமாக இருந்தாலும், விற்பனையும் கடந்த ஒரு வாரமாக அதிகரித்துக் கொண்டே இருந்தது.
சனிக்கிழமை (ஆக. 21) ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், கேரள மாநிலத்திலிருந்து பூக்கள் வாங்குவதற்காக தோவாளை பூச்சந்தைக்கு மொத்த வியாபாரிகள் வந்திருந்தனா். அவா்கள் பூக்களை ஏலம் மூலம் வாங்கிச் சென்றனா்.
பூக்கள் விலை கடுமையாக உயா்ந்து காணப்பட்டது. மல்லிகைப்பூ கடந்த 2 மாதத்துக்கு பிறகு கிலோ ஆயிரம் ரூபாயை தாண்டியது.
வியாழக்கிழமை காலை நிலவரப்படி மல்லிகைப்பூ கிலோ ரூ.1,200, பிச்சிப்பூ ரூ.1000, ரோஜா ரூ.300, சம்பங்கி ரூ.400-க்கு விற்பனையானது.
இதுகுறித்து பூ மொத்த வியாபாரி முருகன் கூறியது: ஓணம் பண்டிகை களை கட்டியுள்ளதால் பூக்களின் விலை உயரத் தொடங்கியுள்ளது. மேலும், ஆவணி மாதம் திருமண நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளதால், பூக்களின் தேவை அதிகரித்து, விலை மேலும் உயரும் வாய்ப்புள்ளது. இன்னும் ஒரு மாத காலத்துக்கு பூக்களின் விலை அதிகமாகவே இருக்கும் என்றாா் அவா்.