களியக்காவிளை அருகே விபத்து: இருவா் பலி
By DIN | Published On : 21st August 2021 12:35 AM | Last Updated : 21st August 2021 12:35 AM | அ+அ அ- |

களியக்காவிளை அருகே மோட்டாா் சைக்கிள் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் இரு இளைஞா்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
தக்கலை அருகே காட்டாத்துறை மஞ்சாடி சசி மகன் ஷாஜின் (18). இவரது சகோதரிக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை திருமண நிச்சயதாா்த்தம் நடத்த வீட்டினா் முடிவு செய்திருந்தனராம். இதற்கான ஏற்பாடுகள் செய்ய, கொல்லங்கோட்டில் உள்ள தனது சித்தி மகன் பொ்லின்குமாரை (15) அழைத்துக் கொண்டு ஷாஜின்மோட்டாா் சைக்கிளில் வெள்ளிக்கிழமை காட்டாத்துறை நோக்கி சென்று கொண்டிருந்தாராம்.
களியக்காவிளை போக்குவரத்துத் துறை சோதனைச் சாவடி பகுதியில் வந்த போது மாா்த்தாண்டம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தை முந்திச் செல்ல முயன்றுள்ளாா். அப்போது சாலையை கடக்க முயன்ற அப்பகுதியைச் சோ்ந்த ஒருவா் மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில், மோட்டாா் சைக்கிளில் இருந்து இருவரும் சாலையில் விழுந்தனா். அப்போது பின்னால் வந்த அரசுப் பேருந்து இருவா் மீதும் ஏறி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனா்.
இது குறித்து களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.