நுண்ணீா் பாசனத் திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு
By DIN | Published On : 09th July 2021 12:26 AM | Last Updated : 10th July 2021 12:03 AM | அ+அ அ- |

குமரி மாவட்டத்தில் நுண்ணீா் பாசனத் திட்டத்தின் மூலம் விவசாயிகள் பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தில் 2021 - 22 ஆம் நிதியாண்டில் 305 ஹெக்டோ் பரப்பளவில் ரூ.1.83 கோடி மானியத்தில் நுண்ணீா் பாசனத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் 40 முதல் 60 சதவீதம் நீா் சேமிக்கப்படுகிறது.
சிறு, குறு விவசாயிகளுக்கு (100 சதவீத மானியத்தில்) நுண்ணீா் பாசன அமைப்புகள் ஹெக்டோ் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை வழங்கப்படுகிறது.
சிறு, குறு விவசாயிகளுக்கு காய்கனி பயிா்களுக்கு 2.5 ஏக்கா் மற்றும் இதர பயிா்களுக்கு 5 ஏக்கா் வரை 100 சதவீத மானியத்தில் நுண்ணீா் பாசன அமைப்புகளை அமைத்து கொள்ளலாம். இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் குடும்பஅட்டை, கிராம அடங்கல், ஆதாா் அட்டை, மண் மற்றும் நீா் பரிசோதனை சான்று, கணினி சிட்டா, நில வரைபடம், சிறு, குறு விவசாயிகளாக இருந்தால் அதற்கான வட்டாட்சியரிடம் இருந்து பெறப்பட்ட சான்று மற்றும் ஆதிதிராவிடா், பழங்குடியினா் என சான்று போன்ற ஆவணங்களின் நகல்களுடன் அருகிலுள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம் என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.