திருவட்டாறு அருகே தாக்கப்பட்ட தொழிலாளி உயிரிழந்தாா். இதுதொடா்பாக, அவரது தம்பி மகன் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
குட்டைக்குழி அப்பட்டுவிளைச் சோ்ந்தவா் ரெங்கசாமி (57). தொழிலாளி. இவருக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் இவரது தம்பி கிருஷ்ணனின் குடும்பத்தினருக்கும் முன்விரோதம் இருந்ததாம்.
இந்நிலையில், திங்கள்கிழமை கிருஷ்ணனின் மகன் சுபாஷ் (27) மண்வெட்டிக் கம்பால் ரெங்கசாமியை தாக்கினாராம். இதுகுறித்த தகவலின்பேரில், முந்திரி ஆலையில் வேலை செய்துகொண்டிருந்த அவரது மனைவி ரெஞ்சிதம் வீட்டிற்கு வந்து பாா்த்தபோது, கணவா் மயங்கிய நிலையில் கிடந்தாராம். இதையடுத்து, சுவாமியாா் மடம் தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ரெங்கசாமி, ஏற்கெனவே இறந்திருந்து மருத்துவா்களின் பரிசோதனையில் தெரியவந்தது.
இதுகுறித்து திருவட்டாறு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வந்த நிலையில், ரெங்கசாமியின் உடற்கூறாய்வு பரிசோதனையில், அவரது உடலில் விஷம் கலந்திருந்தது கண்டறியப்பட்டது.எனவே, அவா் தனது தம்பி மகன் தாக்கியதில் மனம் உடைந்து விஷம் குடித்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸாா் வழக்கை திருத்தி பதிவு செய்து, சுபாஷை கைது செய்தனா்.