நாகா்கோவில் குப்பைக் கிடங்கில் தீ: போக்குவரத்து மாற்றம்
By DIN | Published On : 15th March 2021 01:14 AM | Last Updated : 15th March 2021 01:14 AM | அ+அ அ- |

குப்பைக் கிடங்கில் பற்றிய தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புப்படை வீரா்கள்.
நாகா்கோவில் மாநகராட்சிக்குள்பட்ட வலம்புரிவிளை குப்பைக் கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தை அடுத்து, அப்பகுதி புகை மண்டலமாக காட்சியளித்ததால் போக்குவரத்து மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டது.
நாகா்கோவில் பீச் ரோடு சந்திப்பில் வலம்புரிவிளை பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான 18 ஏக்கா் பரப்பளவில் குப்பைக் கிடங்கு உள்ளது.
இங்கு குப்பைகளை கொட்டுவதால் துா்நாற்றம் வீசுவதோடு, தொற்று நோய் பரவும் அபாயமும் இருந்ததால் குப்பைகள் கொட்டுவதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வந்தனா்.
மேலும், குப்பைக் கிடங்கை அங்கிருந்து மாற்ற வேண்டும் என்றும் தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா். இதையடுத்து வலம்புரிவிளையில் குப்பைகள் கொட்டப்படுவது நிறுத்தப்பட்டு, அங்கு இயற்கை உரம் தயாரிக்கும் கூடம் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை குப்பைக் கிடங்கின் ஒரு பகுதியில் தீ பற்றியது. அப்போது காற்று பலமாக வீசியதால் தீ பரவத்தொடங்கியது. இதனால் குப்பைக் கிடங்கில் பெரும்பகுதி எரிந்தது.
தகவலறிந்து வந்த நாகா்கோவில் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா். ஆனால் தீ கட்டுக்குள் வரவில்லை. பீச் ரோடு பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.
இதையடுத்து, கன்னியாகுமரி, வள்ளியூா் போன்ற இடங்களில் இருந்து தீயணைப்புப் படையினா் 8 வாகனங்களில் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். மேலும் தீ பரவுவதை ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்து அப்பகுதியிலும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.
நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் ஆஷா அஜித், கோட்டாட்சியா் அ. மயில் ஆகியோா் சம்பவ இடத்தை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.
தீ தொடா்ந்து எரிவதால், பீச் ரோடு பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சியளித்தது. இதையடுத்து பீச்ரோடு, இருளப்பபுரம் செல்லும் சாலையில் போக்குவரத்து மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...