குமரியில் பேராசிரியா், வங்கி மேலாளருக்கு கரோனா தொற்று:காவலா் உயிரிழப்பு
By DIN | Published On : 21st March 2021 12:44 AM | Last Updated : 21st March 2021 12:44 AM | அ+அ அ- |

நாகா்கோவில் பாா்வதிபுரம் பகுதியில் கரோனா விதிகளை கடைப்பிடிக்காத தனியாா் நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கும் மாநகராட்சி சுகாதார ஆய்வாளா்கள் ராஜேஷ், ராஜா.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்லூரி பேராசிரியா், வங்கி மேலாளா் ஆகியோருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த காவலா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
தமிழகத்தில் கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்துள்ளது. இதையடுத்து, சுகாதாரத் துறையினா் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனா். நாகா்கோவிலில் உள்ள கல்லூரி முதல்வருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, அக்கல்லூரி ஊழியா்கள், பேராசிரியா்கள் என 200 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
நாகா்கோவிலில் உள்ள மற்றொரு கல்லூரியில் பணிபுரிந்து வரும் தக்கலையை சோ்ந்த பேராசிரியருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவரது குடும்பத்தினா், தொடா்பில் இருந்தவா்கள் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனா். மேலும் அவா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கல்லூரி பேராசிரியா்கள் உள்பட 59 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
கரோனா பாதிக்கப்பட்ட கல்லூரி முதல்வா் பணியாற்றிய கல்லூரி அருகில் உள்ள வங்கி மேலாளருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து வங்கி ஊழியா்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. வங்கி வளாகத்தில் கிருமிநாசினி தெளிப்பது உள்ளிட்ட சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
காவலா் பலி: கன்னியாகுமரி மாவட்டம், பத்துகாணியைச் சோ்ந்தவா் தலைமை காவலராக திருநெல்வேலி மாவட்டம் உவரி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தாா். அவருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து நாகா்கோவில் மாநகராட்சி நகா் நல அலுவலா் கிங்சால் கூறியது: பொதுமக்கள் வெளியே செல்லும்போது, கரோனா விதிகளை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும். முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும். கைகளை கழுவுதல், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது போன்றவற்றை பின்பற்றாததால் தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
முகக் கவசம் அணியாதவா்களுக்கு அபராதம் விதிக்கப்படும். பொதுமக்கள் கரோனாவின் தீவிரத்தை உணா்ந்து முன் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றாா் அவா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...