குழித்துறை நகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் ஆய்வு மேற்கொண்டாா்.
குழித்துறை நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்களிடம் வரி வசூலிப்பது குறித்தும், வரி வசூலிப்பதன் முன்னேற்ற அறிக்கை குறித்தும் ஆய்வு மேற்கொண்டாா். நகராட்சிப் பகுதிகளில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீா், ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் விநியோகிக்கப்படும் குடிநீா் இணைப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பின்னா், நகராட்சி பொது சுகாதார நிலையத்தில் ஊசி, மருந்துகள் உள்ளிட்டவற்றின் இருப்பினை ஆய்வு செய்தாா். நகராட்சி அலுவலக கட்டடத்தை பாா்வையிட்டு, அவற்றின் உறுதித் தன்மையினை கேட்டறிந்து, பழுதடைந்த கட்டடங்களை சீரமைக்க அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா். மேலும்,அலுவலகத்தில் உபயோகமற்ற தளவாடங்கள் உள்ளிட்ட பொருள்கள் அனைத்தையும் ஏலம் விட நடவடிக்கை மேற்கொள்ளவும், தேவையற்ற பொருள்களை கழிவு செய்யவும் அறிவுறுத்தப்பட்டது.
திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் நகராட்சியில் செயல்பட்டு வரும் கலவை உரக்கிடங்கில் ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடிவுக்கு கொண்டு வரவும் துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதைத் தொடா்ந்து பேருந்து நிலையம் மற்றும் பொது கழிப்பிடங்கள், தினசரி சந்தை கழிவுகளை நுண்ணுயிா் உரமாக்கும் குடில் ஆகியவற்றில் ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டு, தினசரி சந்தையில் உள்ள குப்பைகளை தினமும் அகற்ற நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டாா்.