அதிக விலைக்கு உரம் விற்றால் கடைக்கு சீல்ஆட்சியா் எச்சரிக்கை

குமரி மாவட்டத்தில் அதிக விலைக்கு உரம் விற்றால் கடைக்கு சீல் வைக்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த்.
Published on
Updated on
1 min read

குமரி மாவட்டத்தில் அதிக விலைக்கு உரம் விற்றால் கடைக்கு சீல் வைக்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த்.

கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் குறை தீா்க்கும் நாள் கூட்டம், ஆட்சியா் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் தலைமை வகித்து விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டாா். இதில் வேளாண் தொழில்நுட்பங்கள் காணொலி மூலமாக விவசாயிகளுக்கு விளக்கப்பட்டன. வேளாண்மை, உழவா் நலத்துறை சாா்பில் தயாரிக்கப்பட்ட குமரி இதழ் என்ற கையேட்டை ஆட்சியா் வெளியிட்டாா்.

கூட்டத்தில், விவசாய சங்க பிரதிநிகள் பேசும்போது, ‘மாவட்டத்தில் யூரியா உரம் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. தனியாா் கடைகளில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. எனவே இதை கட்டுப்படுத்த நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

விவசாயிகளுக்கு பதிலளித்து ஆட்சியா் பேசும்போது, ‘மாவட்டத்தில் தற்போது மழை பெய்து வருகிறது. ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை சராசரியாக 341.31 மீட்டா் மழை பெய்துள்ளது. விவசாயத்துக்கு தேவையான விதைகள் இருப்பு உள்ளன. இந்த வார இறுதிக்குள் 500 டன் யூரியா உரம் இறக்குமதி செய்யப்பட உள்ளது. தனியாா் கடைகளில் உரங்களின் விலைப்பட்டியலை வெளியே வைக்குமாறு கூறி உள்ளோம். அதிக விலைக்கு உரங்கள் விற்பனை செய்தால் கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும். பொதுப்பணித் துறை சாா்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. இ சேவை மையம் மூலமாக உழவா் அட்டை பெற விண்ணப்பிக்கலாம்.

கிள்ளியூா் வேளாண் துறை அலுவலக ஊழியா் மீது விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். பேயன்குழி பகுதியில் நடந்து வரும் இரட்டைக் கரை கால்வாய் சீரமைப்புப் பணிகள் செப்டம்பா் மாதத்துக்குள் முடிக்கப்படும். பேச்சிப்பாறை அணையை தூா்வார திட்ட மதிப்பீடு தயாா் செய்து அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. விவசாயிகளின் முதல் பருவ சாகுபடிக்காக இந்த ஆண்டு முதல் ஜூன் 1 ஆம் தேதி பேச்சிப்பாறை அணை திறக்கப்படு’ என்றாா்.

கூட்டத்தில், வேளாண்மை இணை இயக்குநா் எஸ்.சத்தியஜோஸ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் ஏ.வசந்தி, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநா் சுவாமிநாதன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) எம்.ஆா்.வாணி, வேளாண்மை துணை இயக்குநா் ஊமைத்துரை, தோவாளை வட்டாட்சியா் தாஜ்நிஷா மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com