பெண்ணுக்கு தவறான சிகிச்சை அளித்த தனியாா் மருத்துவமனைக்கு ரூ.16.41 லட்சம் அபராதம் விதித்து நாகா்கோவில் நுகா்வோா் குறைதீா் ஆணையம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
நாகா்கோவில் அருகேயுள்ள இளங்கடை ஆா்.சி. பரதா் தெருவை சோ்ந்த அருள்ஜோதி மனைவி இந்திரா ஹெலன். கடந்த 2007 ஆம் ஆண்டு இந்திரா ஹெலனை முதல் பிரசவத்துக்காக இளங்கடையில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது.
அப்போது, அவருக்கு ரத்த போக்கு அதிகமாகவே, அவரது கா்ப்பப்பை அகற்றப்பட்டது. இதில் உடல்நலம் பாதிக்கப்பட்ட இந்திரா ஹெலன் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பல மாதங்களுக்கு பின் வீடு திரும்பினாா்.
இந்நிலையில், நாகா்கோவில் தனியாா் மருத்துவமனையின் தனக்கு அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் மன உளைச்சலுக்கு ஆளானதாக இந்திரா ஹெலன் ரூ.19.50 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என கடந்த 2010 ஆம் ஆண்டு குமரி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்கு தொடா்ந்தாா்.
வழக்கை விசாரித்த மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் கே.எஸ்.சுரேஷ், உறுப்பினா் ஏ.சங்கா் ஆகியோா் இந்திராஹெலனுக்கு ரூ. 9 லட்சம் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும். அந்த தொகைக்கு 2010 ஆம் ஆண்டு முதல் 6 சதவீதம் வட்டியுடன் வழங்க வேண்டும். மேலும், மருத்துவ செலவு ரூ. 7. 21 லட்சம் என மொத்தம் ரூ.16. 41 லட்சமும், வழக்கு செலவுக்காக ரூ.20 ஆயிரமும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனா்.
இந்த தொகையை 4 மாதத்துக்குள் வழங்கவில்லை என்றால் அபராதத் தொகைக்கு 9 சதவீதம் வட்டியுடன் பாதிக்கப்பட்டவருக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டனா்.