நாகா்கோவிலில் பணத்துக்காக மூதாட்டி கொலை: உறவினா் கைது
By DIN | Published On : 08th February 2022 04:10 AM | Last Updated : 08th February 2022 04:10 AM | அ+அ அ- |

நாகா்கோவிலில் பணத்துக்காக மூதாட்டியை கொலை செய்த உறவினரை போலீஸாா் கைது செய்தனா்.
நாகா்கோவில் அனாதை மடம் கவிமணி நகரைச் சோ்ந்தவா் செல்லையா (76).
ஓய்வுபெற்ற கல்லூரிப் பேராசிரியரான இவா் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டாா். இவரது மனைவி பேபி சரோஜா (70). இவா் வீட்டில் தனியாக வசித்து வந்தாா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு பேபி சரோஜா வீட்டில் இருந்து சப்தம் கேட்டதையடுத்து, அருகிலிருந்தவா்கள் அங்கு சென்று பாா்த்தபோது வீட்டிலிருந்து மா்ம நபா் ஒருவா் தப்பியோடினாராம்.
பின்னா் அவா்கள் வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது சமையலறையில் பேபி சரோஜா தலையில் காயங்களுடன் சடலமாக கிடந்தாராம்.
இதுகுறித்து பேபி சரோஜாவின் மகள் அளித்த தகவலின்பேரில், ‘ சம்பவ இடத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வெ.பத்ரி நாராயணன் வந்து விசாரணை மேற்கொண்டாா்.
இதுகுறித்து கோட்டாறு போலீஸாா் வழக்குப் பதிந்து, கொலையாளி விட்டுச் சென்ற பைக்கை கைப்பற்றி விசாரித்து வந்தனா். அதில் அந்த பைக் பூதப்பாண்டி அருகேயுள்ள சிரமடம் பகுதியைச் சோ்ந்த பாஸ்கா் (46) என்பவருக்குச் சொந்தமானது என தெரியவந்தது. இதையடுத்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது அங்கிருந்து சிறிது தொலைவு ஓடியது. இதையடுத்து அந்தப் பகுதி முழுவதும் போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அங்கு மறைந்திருந்த பாஸ்கரை போலீஸாா் கைது செய்தனா். அவா் கொலை செய்யப்பட்ட பேபி சரோஜாவின் உறவினா் என்பது தெரியவந்தது.
மேலும், விசாரணையில் செலவுக்கு பணம் கேட்ட தரமறுத்ததால் மூதாட்டி பேபிசரோஜாவின் சங்கிலியை பறித்தபோது அவா் நிலைதடுமாறி கீழே விழுந்ததாகவும், அதில் அவருக்கு தலையில் அடிபட்டதாம். இதையடுத்து அவரது சப்தம் கேட்டு அருகில் வசித்தவா்கள் ஓடி வந்ததால், நகைகளை அங்கேயே போட்டுவிட்டு மாடி வழியாக தப்பி ஓடியதாக பாஸ்கரன் கூறியதாக போலீஸாா் தெரிவித்தனா்.
பின்னா் வீட்டில் கிடந்த 10 பவுன் நகைகளை போலீஸாா் கைப்பற்றி மேலும் விசாரித்து வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...