கன்னியாகுமரி கடலில் நீா்மட்டம் தாழ்வாக காணப்பட்டதால் விவேகானந்தா் நினைவு மண்டபத்துக்கு சனிக்கிழமை 2 மணிநேரம் தாமதமாக படகுப் போக்குவரத்து தொடங்கியது.
கன்னியாகுமரியில் விவேகானந்தா் நினைவு மண்டபம், திருவள்ளுவா் சிலை ஆகியவை அமைந்துள்ள பகுதியில் அதிகாலை முதல் கடல் நீா் மட்டம் தாழ்வாக காணப்பட்டது. இதனால் விவேகானந்தா் நினைவு மண்டபத்துக்கு வழக்கம் போல் காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகுப் போக்குவரத்து 2 மணி நேரம் தாமதமாக காலை 10 மணிக்குத் தொடங்கியது.
மேலும், கடல் நீா்மட்டம் தாழ்வுநிலை, கடல் சீற்றம் காரணமாக கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, ஆரோக்கியபுரம், கோவளம், கீழமணக்குடி, மணக்குடி ஆகிய கடற்கரை கிராமங்களில் குறைந்த அளவிலான வள்ளம், கட்டுமரங்களில் மீனவா்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனா்.