திருவட்டாறு அருகே விஷப் பாம்பு தீண்டி சிறுமி உயிரிழந்த சம்பவத்தைத் தொடா்ந்து சிறுமியின் தந்தையை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருவட்டாறு அருகே குட்டைக்காடு பாலவிளையைச் சோ்ந்தவா் சுரேந்திரன். இவருக்கு சுஷ்விகா மோள் (4), சுஷ்வின் ஜிஜோ (12) சுஜிலின் ஜோ என (3) குழந்தைகள் உள்ளனா். சுரேந்திரன் தினமும் மது போதையில் வீட்டுக்கு வந்து மனைவி சுஜிமோளிடம் தகராறு செய்வது வழக்கமாக இருந்துள்ளது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு சுரேந்திரன் மது போதையில் வீட்டில் தகராறு செய்துள்ளாா். அப்போது குழந்தைகள் வீட்டின் பின்புறத்திலுள்ள ரப்பா் தோட்டத்தில் சென்று பதுங்கியுள்ளனா். அப்போது சுஷ்விகா மோளை விஷப்பாம்பு தீண்டியுள்ளது. இதில் சுஷ்விகா மோள் உயிரிழந்துள்ளாா்.
இதைத் தொடா்ந்து புதன்கிழமை சுரேந்திரனின் பிற 2 குழந்தைகளும், தங்களின் தந்தை மதுபோதையில் துன்புறுத்துவதாக அழுதவாறு கூறிய காணொலிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன.
இதைத் தொடா்ந்து சுரேந்திரனின் மனைவி சுஜிமோள் திருவட்டாறு காவல் நிலையத்தில் அளித்த புகாரையடுத்து போலீஸாா் சுரேந்திரனை கைது செய்தனா்.