கன்னியாகுமரி அருகே வியாழக்கிழமை இரவு நிகழ்ந்த விபத்தில் மாணவா் உள்பட 2 போ் பலியான சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கன்னியாகுமரி அருகேயுள்ள கரும்பாட்டூா் துரை மகன் சைஜின் (19). இவரும் சாமிதோப்பைச் சோ்ந்த சொரிமுத்து மகன் தேவஜாஸ்பா் (20), தென்தாமரைகுளம் டேனியல் ஜெபராஜ் மகன் பிரவீன் (18) ஆகிய மூவரும் ஒரே மோட்டாா் சைக்கிளில் கன்னியாகுமரிக்கு சென்று கொண்டிருந்தனா். கன்னியாகுமரி புதிய பேருந்து நிலையம் முன்பு செல்லும் போது, எதிரே வந்த அரசுப் பேருந்து மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் சைஜின், தேவ ஜாஸ்பா் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். பலத்த காயமடைந்து பிரவீன் அருகே உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.
இந்த விபத்து குறித்த தகவல் அறிந்த கன்னியாகுமரி போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறு பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.