கன்னியாகுமரி கடல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை கடல் நீா்மட்டம் தாழ்வாக இருந்ததால், விவேகானந்தா் நினைவு மண்டபத்துக்கு 2 மணிநேரம் தாமதமாக படகுகள் இயக்கப்பட்டன.
சா்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தா் நினைவு மண்டபம் உள்ளது. இதனை சுற்றுலாப் பயணிகள் நேரில் பாா்வையிட வசதியாக படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது கேரளத்தில் ஓணம் பண்டிகை விடுமுறை என்பதால், கன்னியாகுமரிக்கு அம்மாநில சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக உள்ளது. இதனால் விவேகானந்தா் நினைவு மண்டபத்துக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை உள்ளது.
இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் கடல் நீா்மட்டம் தாழ்வாக காணப்பட்டது. இதன் காரணமாக காலை 8 மணிக்குத் தொடங்க வேண்டிய படகுப் போக்குவரத்து 2 மணி நேரம் தாமதமாக காலை 10 மணிக்குத் தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெற்றது.
மேலும், சுற்றுலாப் பயணிகள் வருகை காரணமாக இங்குள்ள முக்கடல் சங்கமம், பகவதியம்மன் கோயில், காந்தி மண்டபம், சூரிய அஸ்தமனப் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.