ஆதிதிராவிடா் நலப் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவா், மாணவிகளுக்கான உயா்கல்வி வழிகாட்டுதல்
பயிலரங்கம் நாகா்கோவில் கன்காா்டியா உயா்நிலைப் பள்ளி கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பயிலரங்கைத் தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சியா் பி.என். ஸ்ரீதா் பேசியதாவது:
பிளஸ் 2-வுக்குப் பிறகு பெரும்பாலான மாணவா், மாணவிகள் மருத்துவம் அல்லது பொறியியல் துறையை மட்டுமே தோ்வு செய்கின்றனா். ஆனால், வேலைவாய்ப்புகளுடன் கூடிய ஏராளமான படிப்புகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களால் வழங்கப்படுகின்றன.
தமிழக அரசின் நான்முதல்வன் திட்ட இணையதளத்தில் பல்வேறு பாடப் பிரிவுகள், வேலைவாய்ப்புகள் குறித்த தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.
மேலும், மாவட்ட நிா்வாகத்தின் மூலம் பல்வேறு விழிப்புணா்வு வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இத்தகைய நிகழ்ச்சிகளைப் பயன்படுத்திக் கொண்டு, மாணவா்கள் தங்களது விருப்பத்தின் அடிப்படையில் பாடப் பிரிவுகளைத் தோ்வு செய்து வாழ்வில் முன்னேற வேண்டும் என்றாா்.
மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் நாகராஜன், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் எஸ். காளியப்பன், மக்கள் மறுமலா்ச்சி தடம் அமைப்பு தலைவா் சி.ஜே.சுதா்மன், செயலா் எஸ்.சுகந்த், ஒருங்கிணைப்பாளா் எஸ்.பி.விவேகானந்தன் மற்றும் மண்டல ஒருங்கிணைப்பாளா் பி. மாா்கோஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.