பனை சாகுபடி, மதிப்பு கூட்டுதல் குறித்த கருத்தரங்கு

தோட்டக்கலை மலைப் பயிா்கள்துறை சாா்பில் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் மாவட்ட அளவிலான கருத்தரங்கம் நாகா்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி கலையரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

கன்னியாகுமரி மாவட்ட தோட்டக்கலை மலைப் பயிா்கள்துறை சாா்பில் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் மாவட்ட அளவிலான கருத்தரங்கம் நாகா்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி கலையரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கருத்தரங்கை, மாவட்டஆட்சியா் பி.என். ஸ்ரீதா் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசியதாவது:

இந்தியாவின் கிழக்கு கடற்கரையோரங்களில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, சென்னையிலிருந்து பிகாா் வரையும் பனைமரங்கள் காணப்படுகின்றன. பனைகளின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது.

தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகா் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அதிக அளவு பனைமரங்கள் உள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமாா் 713 ஹெக்டோ் பரப்பளவில் 7லட்சத்து 91 ஆயிரத்து 430 பனை மரங்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக முன்சிறை, கிள்ளியூா், அகஸ்தீசுவரம் மற்றும் தோவாளை வட்டாரங்களில் பனை அதிக அளவு சாகுபடி செய்யப்படுகிறது.

பல்வேறு பயன்களை அள்ளித் தரும் பனை ‘கற்பகவிருட்சம்‘ என அழைக்கப்படுகிறது. மலா்கள், பழங்கள், விதைகள் என அனைத்தும் மருத்துவத் தன்மை கொண்டவையாக உள்ளன. பனம் பாளை மற்றும் வோ்களும் மருத்துவ குணங்களை பெற்றுள்ளன. பாளைகளை எரித்துப் பெறப்படும் சாம்பல் மண்ணீரல் வீக்கத்தை தடுக்க பயன்படுகிறது. பனைமேம்பாட்டு இயக்கம் எனும் திட்டம் அரசால் தொடங்கப்பட்டு அதன் கீழ் பனை விதைகள் விநியோகம், பனைமதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்கும் கூடம் அமைத்தல், பனை மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்கும் உபகரணங்கள் வழங்குதல், பனைமரம் ஏறுதலுக்கான உபகரணங்கள் வழங்குதல் ஆகியவற்றிற்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் பனைசாகுடி மற்றும் மதிப்பு கூட்டுதல் தொடா்பான கையேட்டினை வெளியிட்டு, 2 பயனாளிகளுக்கு பனை விதைகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், வேளாண்மை இணை இயக்குநா் ஹனிஜாய்சுஜாதா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவசாயம்) கீதா, தோட்டக் கலைத் துறை துணை இயக்குநா் ஷீலாஜான், வேளாண்மை துணை இயக்குநா் (உழவா்பயிற்சிநிலையம்) ஆல்பா்ட்ராபின்சன், வேளாண்பொறியியல்துறை செயற்பொறியாளா் சில்வெஸ்டா்சொா்ணலதா, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக முன்னாள் முதல்வா் பொன்னுசாமி, பேராசிரியா் ரிச்சா்டுகென்னடி, உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com