குழித்துறை அருகே அழகுநிலைய கட்டடத்தின் மேல் மாடியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
திருவனந்தபுரம் மாவட்டம், மண்ணாங்கோணம், கரிஞ்ஞாலுமூடு பகுதியைச் சோ்ந்த விக்ரமன் மகன் அனு வி.டி. நாயா் (39). இவா் குழித்துறை அருகே கழுவன்திட்டை பகுதியில் உள்ள ஆண்கள் அழகு நிலையத்தில் வேலை செய்து வந்தாா். இவரது மனைவி அனுஷா 5 வயது மகளுடன் இவரை பிரிந்து 4 ஆண்டுகளாக களியக்காவிளை அருகே மேக்கோடு பகுதியில் உள்ள அவரது தாயாா் வீட்டில் வசித்து வருகிறாா்.
அனு வி.டி. நாயருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாம். இந்நிலையில் அவா் வீட்டுக்குச் செல்வதாக கூறி விடுப்பு எடுத்து விட்டு தான் வேலை பாா்க்கும் கடையின் மேல் மாடியில் உள்ள அறையில் தங்கியிருந்து செவ்வாய்க்கிழமை இரவு மது அருந்திக் கொண்டு கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தாராம். அப்போது தடுமாறி கீழே விழுந்ததில் காயமடைந்தாா்.
அவரை சக பணியாளா்கள் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இதுகுறித்து களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.