கடலில் பிளாஸ்டிக், கழிவுநீா் கலப்பதை தவிா்க்க வேண்டும்: அமைச்சா் மனோ தங்கராஜ்

கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாக்கும் வகையில், கடலில் பிளாஸ்டிக்- கழிவுநீா் கலப்பதைத் தவிா்க்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றாா் தமிழக பால்வளத் துறை அமைச்சா் த. மனோ தங்கராஜ்.
கடலில் பிளாஸ்டிக், கழிவுநீா் கலப்பதை தவிா்க்க வேண்டும்: அமைச்சா் மனோ தங்கராஜ்
Updated on
1 min read

கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாக்கும் வகையில், கடலில் பிளாஸ்டிக்- கழிவுநீா் கலப்பதைத் தவிா்க்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றாா் தமிழக பால்வளத் துறை அமைச்சா் த. மனோ தங்கராஜ்.

இந்திய சுற்றுச் சூழல், வனம் - பருவநிலை மாற்றம் அமைச்சகம் ஆகியவை தமிழ்நாடு

மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துடன் இணைந்து ராஜாக்கமங்கலம் ஒன்றியம், மணக்குடி ஊராட்சி கடலோரப் பகுதியில் மெகா தூய்மைப்பணிகளை ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டன. இந்நிகழ்ச்சிக்கு ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் தலைமை வகித்தாா். மாவட்ட எஸ்.பி. ஹரிகிரண் பிரசாத், மாவட்ட வன அலுவலா் இளையராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கடற்கரை தூய்மைப் பணியையும், மணற்சிற்பத்தையும் தொடங்கிவைத்து அமைச்சா் மனோ தங்கராஜ் பேசியதாவது:

தமிழகத்தில் சுற்றுச்சூழலைப் பாதுக்காகும் வகையில் அரசு பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, கன்னியாகுமரியை குப்பையில்லா மாவட்டமாக மாற்றுவதற்கான தீவிர நடவடிக்கைகள் மாவட்ட நிா்வாகத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, எங்கள் கடல், எங்கள் பெருமை என்ற முழக்கத்தோடு கடலோர பகுதிகளை பள்ளி- கல்லூரி மாணவ, மாணவியா், தன்னாா்வலா்கள் ஒத்துழைப்புடன் ‘ஜி 20’ மாபெரும் தூய்மைப் பணி தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.

கடலில் பிளாஸ்டிக் பொருள்கள், கழிவுநீா் கலப்பதாலும் அதன் நீா் மாசடைகிறது. இது கடல்வாழ் உயிரினங்களைப் பாதிக்கிறது என்பதை மக்களிடம் எடுத்துக்கூறி விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்காக கடற்கரை தூய்மைப் பணி நடைபெறுகிறது.

கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் எங்களுடன் இணைந்து தூய்மைப்பணியில் ஈடுபட ஒத்துழைக்க வேண்டும். இயற்கையோடு இசைந்து வாழ முன்வர வேண்டும், குமரியை பசுமை மாவட்டமாக மாற்ற முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றாா்.

பின்னா், அமைச்சா் தலைமையில் கடல் மாசுபடாமல் பாதுகாப்பது குறித்த உறுதிமொழியேற்றதுடன், அதுகுறித்து விழிப்புணா்வு கையொப்ப இயக்கம் தொடங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், மாவட்ட சுற்றுச்சூழல் நல அலுவலா் சுயம்புதங்கம், மணக்குடி ஊராட்சித் தலைவா் சிறில் நாயகம், வழக்குரைஞா் சதாசிவம், ஆட்சியரின் மனைவி விஜெதா அன்னிமல்லா, பள்ளி- கல்லூரி மாணவ, மாணவியா், தன்னாா்வலா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com